களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்
ஆண்டு முழுவதும் உழைத்த களைப்பினைப் போக்க சில நாட்களாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது அவசியம். உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத்தை தரக்கூடிய இடங்களுக்கு சில நாட்கள் சென்றுவந்தாலே புத்துணர்வு ஏற்படுவது இயற்கை.
கோடையும் தொடங்கிவிட்டது. பள்ளி விடுமுறையில் பயணம் செய்ய நெல்லை மாவட்டத்தில் உள்ள முண்டன்துறை புலிகள் சரணாலயம் அற்புதமான இடமாகும்.
திருநெல்வேலியில் இருந்து சுமார் 46 கி.மீ தூரத்தில் உள்ள பாபநாசத்தை அடுத்து அமைந்துள்ளது இந்த சரணாலயம். சுமார் 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள வனப்பகுதியில் செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரை பருவ காலம் ஆகும்.
குற்றாலத்துக்கு 75 கிலோ மீட்டர் தெற்கே உள்ள இந்த புலிகள் சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. இங்கு புலிகள் மட்டுமின்றி சித்தல் (Chital), கடம்பை மான்கள், காட்டுப் பன்றிகள், சிங்கவால் குரங்குகள் மிகுதியாக வாழ்கின்றன.
அருவிகள் மற்றும் ஆறுகள்
இந்த சரணாலயப் பகுதியில் பாண தீர்த்தம் மற்றும் அகஸ்தியர் அருவி ஆகிய இரண்டு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. தாமிரபரணி, மணிமுத்தாறு உள்ளிட்ட முக்கிய நதிகளுடன் பல கிளை நதிகளும் இந்த சரணாலயப் பகுதியில் ஓடுகின்றன. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் நீராதாரமாக இந்த ஆறுகள் விளங்குகின்றன.
பாணதீர்த்த அருவிக்கு செல்ல காரையார் அணைப்பகுதியை படகு மூலம் கடந்து வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும். இது ஒரு அருமையான அனுபவத்தை ஏற்படுத்தும். இங்கு ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் வருவது சிறப்பு.
வனத்துறையிடம் அனுமதி பெற்று இங்கு மலையேற்றத்தில் (டிரெக்கிங்) ஈடுபடலாம். காட்டுக்குள் தங்கு வதற்கு வனத்துறை விருந்தினர் மாளிகை மற்றும் அருகில் அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் போன்றவை உண்டு. வனத்தின் அழகை கண்டு ரசிக்க வனத்துறையினர் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சொரிமுத்து அய்யனார்
காரையார் வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து ஐயனார் ஆலயம் பிரசித்தி பெற்றது. ஆடி அமாவசை அன்று நடக்கும் விழாவிற்கு பத்து நாட்கள் தங்கியிருந்து இறைவனை வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது?
மதுரை, நெல்லை உள்ளிட்ட ஊர்களில் இருந்து பாபநாசத்திற்கு பேருந்து, வசதிகள் உண்டு. அங்கிருந்து தனியார் வாகனங்கள் மூலம் முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு செல்லலாம்.