குற்றால சீசன் களைகட்டியது: பாதுகாப்பு பணியில் 80 போலீசார்
குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் குறித்த காலத்தில் துவங்கியது. இதனால் சீசன் துவங்கிய ஒரு சில தினங்கள் அருவி பகுதியில் குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் 8 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 80 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் பெண் போலீசார் ஆவர். இருப்பினும் ஷிப்டு முறையில் பணியாற்றுவதால் ஒரு ஷிப்டுக்கு 40 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். அருவி பகுதி, கார் பார்கிங், பேருந்து நிலையம், ரோந்து பணி என பல்வேறு பணிகள் உள்ளதால் இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
அருவியில் கும்பலாக குளிக்க வருகின்றவர்கள், குடிபோதையில் தகராறு செய்தால் அவர்களை மடக்கி பிடிப்பதற்கு போதுமான போலீசார் இல்லை. எனவே, கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அதிகமான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.