நாளை திருப்பதியில் கருட வாகன சேவை-5 லட்சம் பக்தர்கள் திரள்கின்றனர்
திருமலையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய அம்சமான கருடவாகன சேவை திங்கட்கிழமை நடைபெறுவதை ஒட்டி அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏழுமலைமீது வாசம் செய்யும் வேங்கடவன் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பிரம்மனே வந்து உற்சவவிழா எடுக்கிறார் என்பது ஐதீகம். இதனை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் வெங்கடேச பெருமாளுக்கு பத்துநாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டிற்கான விழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி மரபுப்படி பட்டு வஸ்திரம் வழங்கி பிரம்மோற்சவத்தை தொடங்கிவைத்தார். விழாவை ஒட்டி திருமலையில் கோவிலை சுற்றிலும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
முதல்நாள் இரவு மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சேஷவாகனத்தில் எழுந்தருளி நான்குமாட வீதிகளிலும் குழுமியிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாற்கடலில் ஆதிசேசன் மீது இறைவன் எழுந்தருளியிருப்பார் அல்லவா அதனை அனைவராலும் காணமுடியாது என்பதால் பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் மலையப்ப சுவாமி சேஷவாகனத்தில் நான்கு மாட வீதிகளிலும் வலம் வருகிறார் என்பது ஐதீகம். இரண்டாம் நாள் சரஸ்வதியை போல வேடமணிந்து வெண்பட்டுடுத்தி கையில் வீணையுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். மூன்றாம் நாள் காலை சிம்மவாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் சப்பரத்தில் காலிங்கநர்த்தன மாடியவாறு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி வலம் வந்தார்.
கற்பகவிருட்சம்
நான்காம் நாளன்று மலையப்ப சுவாமி கற்பக விருட்சவாகனத்தில் வலம் வந்ததை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏனென்றால் இறைவன் ஏழுமலைவாசன் கேட்ட வரம் தருபவன் அல்லவா, அந்த இறைவனே கற்பகவிருட்ச வாகனத்தில் வலம் வருவதை பக்திப்பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர்.
கருடவாகனம்
மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். இந்த கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது சிறப்பம்சம். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான திங்கட்கிழமை காலை மோகினி அலங்காரத்தில் இறைவன் எழுந்தருகிறார் அன்றிரவு கருடவாகன சேவை நடைபெறுகிறது. இதனைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிகின்றனர். 5 லட்சம் பக்தர்கள் வரை திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரண்டாம் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினம் தினம் ஒரு வாகனம், நித்தம் ஒரு அலங்காரம் என பத்துநாட்களும் காலை மாலை இருவேளையும் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளிலும் வலம் வருகிறார். இதனைக்கண்குளிர காணவே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திருமலையில் திரள்கின்றனர்.