மகர ஜோதி தெரிவது எப்படி என்று விசாரணை நடத்த முடியாது-கேரள அரசு
திருவனந்தபுரம்: சபரிமலையில் தெரியும் மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா என்று ஆராய விரும்பவில்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் மகரஜோதி தினத்தன்று புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தால் மகரஜோதி பற்றி பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மகரஜோதி மனிதரால் ஏற்றப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி கேரள யுக்திவாதி அமைப்பு உள்பட 3 அமைப்புகள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த மனு கடந்த வாரம் நீதிபதிகள் ராமகிருஷ்ணன், கோபிநாதன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மகரஜோதி பற்றியும், புல்மேடு விபத்து பற்றியும் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். மேலும் மகரஜோதி எப்படி தெரிகிறது, அதை மனிதர்கள் ஏற்றுகிறார்களா என்பது பற்றி விளக்கம் அளிக்கும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதற்கு கேரள அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மகரஜோதியை தரிசிப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். தங்களுக்கு கடவுள் மீது இருக்கும் நம்பிக்கை காரணமாகவே பக்தர்கள் மகர ஜோதியை தரிசிக்க வருகின்றனர்.
பக்தர்களின் இந்த நம்பிக்கையில் தலையிட அரசு விரும்பவில்லை. எனவே மகரஜோதி மனிதரால் ஏற்றப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தும் எண்ணம் கேரள அரசுக்கு இல்லை. இது குறித்து ஏற்கனவே முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.