நாளை கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாட்டம்
தேனி: தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் நாளை(18-ம் தேதி) சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது வண்ணாத்திப்பாறை. இங்கு கற்புக்கரசி கண்ணகிக்கு கோயில் உள்ளது.
இந்தக் கோயில் கடல் மட்டத்திலிருந்து ஐந்தாயிரம் அடி உயரத்தில் தமிழக, கேரள எல்லைப்பகுதியில் உள்ள மலை மேல் அமைந்துள்ளது. இக்கோயிலை கண்ணகி கோட்டம் என்று தமிழகமும், மங்களதேவி கோயில் என்று கேரளமும் அழைத்து வருகிறது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று கண்ணகிக்கு விழா எடுப்பது தமிழர்களின் நீண்ட நாள் வழக்கம். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மூன்று நாட்கள் நடந்த இந்த விழா கேரள வனத்துறையின் கெடுபிடியால் ஒரு நாளாக மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் இரு மாநில அரசுகளும் கலந்துபேசி கண்ணகி கோயில் விழாவை நடத்தி வருகின்றன. கண்ணகி கோயிலுக்குச் செல்ல தமிழக வனப்பகுதி வழியே முறையான சாலை அமைக்கப்படவில்லை.
இதனால் கேரள அரசின் அனுமதி பெற்று பல கெடுபிடிகளுக்கு மத்தியில் கண்ணகி கோட்டம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை(18-ம் தேதி) நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை இரு மாநில அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கண்ணகி கோயில் யாருக்குச் சொந்தம் என்பதில் தமிழக, கேரள மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.