குருத்தோலை ஞாயிறு: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
நெல்லை: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நேற்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடினர்.
கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதிவாரம் புனித வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாள் குருந்தோலை பவனிகள் நடக்கிறது. புனித வியாழனை முன்னிட்டு இயேசு கிறிஸ்து தமது சீடர்கள் பாதங்களை கழுவி துடைத்த நிகழ்வை சித்தரிக்கும் வகையிலும், பாதம் கழுவும் நிகழ்வு கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நடக்கிறது. புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருநாள் வரும் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக நேற்று (17ம் தேதி) புனிதவாரம் தொடங்கியது. இது குருத்தோலை ஞாயிறு திருநாளாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்பாக ஜெருசலம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதை குட்டியின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் குருத்தோலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர்.
இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்வதர்கள் குருத்தோலை திருநாளை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஞாயிற்று கிழமை வருவதால் குருத்தோலை ஞாயிறு என அழைக்கப்படுகிறது.