துபாயில் தமிழக மாற்றுத்திறனாளி மாணவனின் இசை நிகழ்ச்சி: இந்திய கன்சல் ஜெனரல் பாராட்டு
துபாய்: துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி கடந்த 19-ம் தேதி மாலை அஸ்டோரியா ஹோட்டலில் நடைபெற்றது.தமிழகத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (14). மனநலம் குன்றியவர். தனது இனிய குரலால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். சுமார் 2000-க்கும் மேற்பட்ட பாடல்களை மனனம் செய்துள்ளார். கீ போர்டு பயிற்சியும் எடுத்து வருகிறார்.
அவரது இசை நிகழ்ச்சி கடந்த 19-ம் தேதி மாலை துபாயில் உள்ள அஸ்டோரியா ஹோட்டலில் நடந்தது. இந்த இன்னிசை விருந்தில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தனது மனைவியுடன் கலந்துகொண்டார். பின்னர் பேசிய அவர் இது போன்றவர்களை நாம் அனைவரும் உற்சாகப்படுத்தி ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்த இந்திய சமூக நலக் கமிட்டியின் தலைவர் கே. குமாரையும் பாராட்டினார்.
இந்திய, பாகிஸ்தானியப் பாடல்கள், பாப், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு பாடல்களைப் பாடி பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
இது மட்டுமல்லாது சிறப்புக் குழந்தைகளுக்கான சமூக நல அமைப்பான சாதி, துபாய் கைராலி கலா மன்றம், பல்வேறு தமிழ் மற்றும் கேரள அமைப்புகள், 94.7 எஃப்.எம். உள்ளிட்டவற்றிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.
கார்த்திக்கின் பள்ளியிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த கலை நிறுவன விருதுக்காக பாடல் அனுப்பப்பட்டிருந்தது. எனினும் அமெரிக்கா செல்ல இயலாத சூழலினால் அது கைகூடவில்லை.
கார்த்திக்கிற்கு அவரது சகோதரர் விக்னேஷ், பெற்றோர்கள் மற்றும் பாட்டி பெரும் ஆதரவாக இருக்கிறார்கள்.