திருப்பதி கோயில் தலைமுடியை ஏலத்தில் எடுக்க பிரான்ஸ் நிறுவனம் ஆர்வம்
திருப்பதி: திருப்பதி கோயிலில் சேகரமாகும் காணிக்கை முடிகளை வாங்க, பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
திருப்பதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வருவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை செலுத்திச் செல்கின்றனர். இந்த முடிகள் பல வகைகளில் பயன்படுவதால், இவற்றை வாங்க பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
தற்போது, 300 கோடி ரூபாய் மதிப்பிலான தலைமுடியை சேகரித்து வைத்துள்ளது திருப்பதி தேவஸ்தானம். இதை இணையதள ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். தற்போது இந்த முடியை வாங்க, பிரான்ஸ் நாட்டின் ஷால்வியோ என்ற நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
தலைமுடிகளை, அதிக விலைக்கு வாங்கி, தரம்பிரித்து, சுத்தப்படுத்தி நீண்டகாலம் வரை இருப்பில் வைத்து, விற்பனை செய்ய, இந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் நிபுணர் நிக்கோலஸ் ஆகியோர், தேவஸ்தான அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தலைமுடிகளைத் தரம் பிரித்த பின்னர், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்யும் முயற்சியில் தேவஸ்தான அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.