வாஞ்சிநாதன் நூற்றாண்டு நினைவு தினம்-செங்கோட்டையில் அனுஷ்டிக்கப்படுகிறது
இந்திய விடுதலை போரில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தமிழகத்தில் முதன் முதலாக ஆயுதம் ஏந்திய மாவீரன் வாஞ்சிநாதன் செங்கோட்டையை சேர்ந்தவர். சுதந்திர போராட்டம் தீவிரமாக இருந்த காலத்தில் 1911ம் ஆண்டு ஜூன் மாதம் 17 – ம் நாள் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டு கொன்று விட்டு தானும் அதே துப்பாக்கியால் சுட்டு கொண்டு வீரமரணம் அடைந்தார் வாஞ்சிநாதன்.
இதனையடுத்து ஆண்டுதோறும் ஜூன் 17ம் தேதி செங்கோட்டையில் வாஞ்சிநாதன் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகிறது. வாஞ்சிநாதன் தனது இன்னுயிரை தியாகம் செய்து இந்தாண்டுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதனையொட்டி அவரது நினைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன், தென்காசி எம்பி லிங்கம், கடையநல்லூர் எம்எல்ஏ செந்தூர் பாண்டியன் மற்றும் ஏராளமான சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர், உள்ளாட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு வீரவாஞ்சிநாதனுக்கு மரியாதை, செலுத்தி அவரது தியாகத்தை நினைவு கூறுகின்றனர்.
இந்நிலையில் செங்கோட்டை முத்துசாமி பூங்கா அருகே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாஞ்சிநாதன் மணி மண்டப பணிகள் வேகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.