காடு வளர்ப்பில் இந்தியா சாதனை-ஆண்டுக்கு 3 லட்சம் ஹெக்டேர் காடுகள் அதிகரிப்பு
நியூயார்க்: காடுவளர்ப்பில் ஆசியா உலகிலேயே முன்னணியில் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஆண்டுக்கு 3 லட்சம் ஹெக்டேர் காடுகள் அதிகரித்துக் கொண்டே போவதாக ஐ.நா., உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் வனப் பிரிவு இயக்குநர் எடுவர்டோ ரோஜாஸ் பிரையல்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆசியா, உலக அளவில் காடு வளர்ப்பில் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாக உள்ளது. அதிலும் இந்தியாவில் ஆண்டுக்கு 3 லட்சம் ஹெக்டேர் காடுகள் என்ற வீதத்தில் வளர்ச்சி காணப்படுகிறது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் அதே நிலையில், காடு வளர்ப்பும் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மியான்மர் ஆகிய நாடுகளில்தான் பெருமளவிலான வனப் பகுதிகள் உள்ளன. ஆசிய அளவில் உள்ள காடுகளின் எண்ணிக்கையில், இந்த நாடுகளின் பங்கு மட்டும் 74 சதவீதமாகும். ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் காடு அழிவு என்பது கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்றார் அவர்.