தேக்கடியில் படகில் செல்லும் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் - கேரள அரசு முடிவு
திருவனந்தபுரம்: தேக்கடியில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் வசதி அளிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு தேக்கடிக்கு சுற்றுலா சென்ற பயணிகள் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 45 பேர் இறந்தனர்.
நாடு முழுவதும பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து விசாரிக்க நீதிபதி மைதீன்குஞ்சு தலைமையிலான விசாரணை கமிஷனை கேரள அரசு நியமித்தது. இந்த நிலையில் நீதிபதி மைதீன் குஞ்சு விசாரணை அறிக்கை கேரள அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் படகு தயாரிப்பில் ஏற்பட்ட கோளாறு, கூடுதல் பயணிகளை ஏற்றியது, டிரைவரின் அனுபவ குறைவு போன்றவையே விபத்து ஏற்பட காரணமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் படகு பதவிக்கான நிபந்தனைகளை கடுமையாக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றக்கூடாது. படகில் செல்லும் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து பயணிகளுக்கும் படகில் உயிர் காக்கும் கருவிகள் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகள் எல்லாவற்றையும் கேரள அரசு அங்கீகரித்துள்ளது.
இதன்படி தேக்கடியில் படகில் செல்லும் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் அமுல்படுத்தப்படும் என கேரள சுற்றுலா துறை அமைச்சர் அனில்குமார் தெரிவித்தார்.