தமிழகத்தில் பல பல்கலைக்கழங்கள் தோற்றுவித்தவர் கருணாநிதி: அன்பழகன் புகழாரம்
நெல்லை: முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் பல்வேறு புதிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்று நெல்லை பல்கலைக்கழக விழாவில் நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
நெல்லை மனோ்ன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பெரியார் இருக்கை, அண்ணா இருக்கை துவக்கவிழா, தமிழ், ஆங்கிலம், கம்யூட்டர், பொறியியல், தகவல் தொழில்நுட்பதுறை மற்றும் பொறியியல் மையம், மாணவர் விடுதி, பேராசிரியர்கள் வளாகம் ஆகிய புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, திசையன்விளை, பணகுடி மனோ கல்லூரிகளில் புதிய வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் கருப்பசாமி பாண்டியன், மாலை ராஜா, அப்பாவு, மேயர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக துணை வேந்தர் சபாபதி மோகன் வரவேற்றார்.
தமிழக நிதியமைச்சர் அன்பழகன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசியதாவது,
கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் ரூ.20 கோடி அளவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கட்டிடங்கள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்வி சமுதாயம் உருவாக வேண்டும் என்ற அடிப்படையில் கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர், பெரியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இளைய சமுதாயம் உயர் கல்வி பெற தொலைநோக்கு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். காலம் மாறி இருக்கிறது. அதற்கு ஏற்ப நாம் வளர வேண்டும். இளைஞர், இளம்பெண்கள் கல்வி கற்றால்தான் சமுதாய மாற்றம் ஏற்படும்.
தமிழகத்தில் பெரியாரும், அண்ணாவும் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி தமிழர்களை தலை நிமிரச் செய்தனர். சமுதாய முன்னேற்றத்துக்கு பெரியார் சமுதாய வித்து எனில் அதில் உருவான ஆல விருட்சம் அண்ணா. இவ்வாறு அவர் பேசினார்.