சித்திரைத் திருவிழா-16ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம்-18ம் தேதி ஆற்றிரல் இறங்குகிறார் அழகர்
சைவமும், வைணவமும் இணைந்து கொண்டாடும் ஒரு பெருவிழா மதுரை சித்திரைத் திருவிழா. அகிலம் போற்றும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணமும், இதன் தொடர்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தளும் வைபவமும் நடைபெறுகிறது. இந்த விழா சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
கடம்பவனம், ஆலவாய், கூடல் மாநகர், நான்மாடக்கூடல், என பழம் பெயர்களைக்கொண்ட மதுரையில் எழுந்தருளியிருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு மாதந்தோறும் திருவிழா நடக்கும். ஒரு ஆண்டின் 365 நாட்களில் 294 நாட்கள் இங்கு திருவிழா நடப்பது வேறு எங்கும் இல்லாத அதிசயம். இந்த விழாக்களின் மிகச்சிறப்பான ஒரு விழா என்பது மீனாடசி திருக்கல்யாணம் ஆகும்.
சித்திரை மாதத்தில் நடக்கும் இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தெய்வங்களின் இந்த திருக்கல்யாணத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்குபவர்கள் பலர். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் என்பது, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், திருத்தேர் உலா என்று மதுரை மக்களுக்கே உரித்தான கொடுப்பினை என்று சொல்லலாம்.
சைவமும், வைணவமும் மோதிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதை இரண்டையும் இணைக்கும் வகையில் திருமலை நாயக்கர் உருவாக்கியதுதான் இந்த சித்திரைத் திருவிழா.
அதுவரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தனியாகத்தான் நடந்து வந்தது. திருமலை மன்னர் காலத்தில்தான் இரண்டையும் இணைத்து பெரிய விழாவாக்கினார். அன்று முதல் இன்று வரை மதுரை மண்ணின் மிகப் பெரிய திருவிழாவாக மட்டுமல்லாமல், தமிழகத்தின் முக்கியத் திருவிழாவாகவும் இது நடத்தப்பட்டு வருகிறது.
வைகை ஆற்றில் கள்ளழகர்
தங்கை மீனாட்சியின் கல்யாணத்திற்காக அழகர் கோவிலிலிருந்து கிளம்பி வரும் கள்ளழகர், தான் வருவதற்குள் கல்யாணம் முடிந்து விட்டதை அறிந்து கோபம் கொண்டு மதுரை நகருக்குள் வராமல் ஆற்றோடு நின்று அப்படியே திரும்பிப் போவதாக மீனாட்சியம்மன் திருக்கல்யாண புராணம் கூறுகிறது. அழகர் எந்தப் பட்டை உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ அது தொடர்பானவை அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
மாண்டூக முனிவருக்கு சாபவிமோசனம்
சித்ரா பௌர்ணமிதோறும் வைகை நதியில் எழுந்தருளும் கள்ளழகர், தல்லாகுளம் வழியாக வந்து வைகை நதியில் இறங்கி, அதன் வடகரையில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் தருகிறார்.
இதனால் இந்த இடம் மண்டூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மண்டியூர் என்று மருவி, தற்பொழுது வண்டியூர் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் ஷேச வாகனத்தில் வைகையாற்றின் நடுவில் இருக்கும் மையமண்டபம் எனப்படும் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி நாரைக்கு சாப விமோசனம் தந்து அதன்பின்பு தீர்த்தவாரி காண்கிறார்.
தீர்த்தவாரி முடிந்து தங்கக் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்குச் சாப விமோசனம் தந்து, இராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் கண்டு பூப்பல்லக்கில் அழகர் மலைக்குத் திரும்புகிறார். சித்திரை திருவிழா கொடியேற்றம் தொடங்கி அழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவம் வரை தினந்தோறும் நடைபெறும் விழாக்களை காண லட்சக்கணக்காண மக்கள் மதுரைக்கு திரள்கின்றனர்.
இந்த வருடத்து மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன் பின்னர் தினசரி ஒரு வாகனத்தில் அம்மனும், சுந்தரேஸ்வரும் எழுந்தருளுவார்கள்.
14ம் தேதி மதுரை மண்ணின் அரசியாக மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெறும். 15ம் தேதி சொக்கநாதருடன் அன்னை மீனாட்சி திக்கு விஜயம் செல்கிறார். 16ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
17ம் தேதி அருள்மிகு கள்ளழகர் மதுரை வருகிறார். அவருக்கு தல்லாகுளத்தில் எதிர்சேவை எனப்படும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18ம் தேதி கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.