பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்
முழுநிலவு நாளான பவுர்ணமி அன்று சிவனை வணங்குவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பவுர்ணமி விரதம் மேற்கொள்பவர்கள் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி நன்னாளில் மரிக்கொழுந்து இலையால் சிவனை அர்ச்சனை செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் சுவாமிக்கு வெண்பட்டாடை சமர்ப்பித்து, பலாசு என்னும் ஒருவகை மரத்தில் மலரும் மலர்களான மாலையை அணிவிப்பது மிகவும் விஷேசம். வெறும் சாதத்தை படைத்து தூய்மையான முறையில் சித்ரா பவுர்ணமி பூஜை செய்தால், லட்சுமி கடாட்சமும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று ஆகமங்கள் சொல்கின்றன.
இந்திரன் வணங்கும் சோமசுந்தரர்
மதுரையில் சித்ரா பவுர்ணமி விஷேசமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான காரணம் திருவிளையாடல் புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. தேவர்களின் தலைவனான இந்திரன், விருத்திராசுன், விஸ்வரூபன் என்ற இருவரை கொன்றான். பிறப்பினால் அந்தணர்களான அவர்களை கொன்றதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் ( பிராமணர்களை கொன்றதால் வரும் தோஷம்) பற்றியது. தோஷத்தில் இருந்து மீள வழி தெரியாமல் தவித்த இந்திரன் குல குருவான குருபகவானிடம் வழி கேட்டான்.
"பூலோகத்தில் உள்ள சிவ தலங்களை வழிட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றார் குரு. அவரது கட்டளைப்படி காசி, காஞ்சி, திருவண்ணாமலை முதலிய சிவதலங்களை வழிபட்டு விட்டு தெற்கு நோக்கி சென்றான் இந்திரன். கடம்ப மரங்கள் நிறைந்திருந்த இடத்திற்கு வந்த உடன் தன்னைப்பற்றியிருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதை உணர்ந்தான் இந்திரன். அந்த மண்ணை மிதித்தவுடன் மன மகிழ்ச்சி ஏற்பட்டது.
இந்திர விமானம்
கடம்பமரத்தடியில் பேரொளிப்பிழம்பாக காட்சி தந்த சர்வேஸ்வரனை தன் ஆயிரம் கண்களால் கண்டு களித்தான் இந்திரன். மரத்தடியில் இருந்த இறைவனுக்கு ஸ்ரீ விமானம் அமைக்க நினைத்த இந்திரன் தேவலோகத்தில் இருந்து மயனை வரவழைத்து பணி செய்ய கட்டளை இட்டான்.
விண்ணில் இருந்து விமானம் வந்தது. எட்டு திசைகளிலும் எட்டு யானைகள் தாங்கின. 32 சிகரங்களும், 64 சிவகணங்களும் அந்த விமானத்தில் இருந்தன. மதுரை சோமசுந்தரருக்கு இந்திரனே விமானம் அமைத்ததால் அது இந்திர விமானம் என்று பெயர் பெற்றது.
சித்ரா பவுர்ணமி வழிபாடு
இந்திரனின் வழிபாட்டில் மகிழ்ந்து காட்சி தந்த இறைவன் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று என்னை வழிபடுக என்று கட்டளையிட்டார். இதனாலேயே மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரரை கண்டு வழிபட ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று தேவலோகத்தில் இருந்து இந்திரன் மதுரைக்கு வருவதாக திருவிளையாடல் புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.