சித்திரை திருவிழா: நாளை மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம்
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை அருள்மிகு மீனாட்சியம்மன், சுவாமி, பிரியாவிடை தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.
முன்னதாக கோயிலுக்குள் யானை மகாலுக்கு அருகே அருள்மிகு திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலை நிறுத்திய வரலாற்றை விளக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமி, அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
இந்நிலையில் நாளை( 14-ம் தேதி) தங்கப் பல்லக்கில் சுவாமி, அம்மன் கிழக்கு, தெற்குச் சித்திரை வீதிகளில் எழுந்தருளுகின்றனர்.
பின்னர் நேதாஜி சாலை வழியாக மேலமாசி வீதிக்குச் செல்லும் அம்மன், சுவாமி அங்கிருந்து மேலமாசி வீதி திருஞானசம்பந்தர் சுவாமி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி அருள்பாலிக்கின்றனர்.
அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு சுவாமி, அம்மன் புறப்பாடாகி மாலை 6 மணிக்கு கோயிலில் எழுந்தருளுகின்றனர். அம்மன் சன்னதி முன்புள்ள ஆறுகால் பீடத்தில் மாலை 6.05 மணிக்கு மேல் 6.29 மணிக்குள் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
அங்கு துலா லக்னத்தில் அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு கிரீடம் சூட்டி செங்கோல் அளிக்கப்படுகிறது.
வரும் 15-ம் தேதி மாலை மீனாட்சியம்மன் திக் விஜயம் நடைபெறுகிறது. 16-ம் தேதி காலையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறுகிறது. 17-ம் தேதி மாசி வீதிகளில் திருத் தேரோட்டம் நடைபெறும்.