மனநோய்க்கு மருந்தாகும் கஞ்சா
இளைய தலைமுறையினரால் போதைப் பொருளாக உபயோகிக்கப்படும் கஞ்சா செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
பண்டைய எகிப்தில் கண் வீக்கம் போக்கவும், கருப்பையினை குளிர வைக்கவும், இத்தாவரம் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்தியாவில் கி.மு. 800 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்கிறது.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் இலைகளின் வடிசாறு அல்லது இலைகளை வலிபோக்கும் மருந்தாக அறுவை சிகிச்சையின் பொழுது பயன்படுத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தீவிர ஆய்வுகளுக்குப் பின்னர் வலி போக்கும் மருந்தாக பரவலாக சிபாரிசு செய்யப்பட்டது. விக்டோரியா மகாராணி வலி போக்குவியாக இத்தாவரத்தினை பயன்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது.
இன்றைக்கு அதிக அளவில் போதை வஸ்துவாக மட்டுமே பயன்படுத்தப்படுவதால் இது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் விதை மற்றும் தண்டு நார்களுக்காகவும், கள்ளத்தனமாக கஞ்சாவிற்காகவும் தற்போது மலைப்பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் 60க்கும் மேற்பட்ட கன்னாபினாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவையே இத்தாவரத்தின் செயல் ஊக்கப் பொருட்களாகும். ஃபிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. விதை எண்ணெயில் லினோலியிக் அமிலம் உள்ளது.
மருத்துவப் பயன் உடைய பகுதிகள்
தாவரத்தில் இருந்து பெறப்படும் பிசின் போன்ற பொருள், இலைகள், பெண் தாவரத்தின் மலர் கொண்ட அல்லது கனி கொண்ட நுனிப்பகுதி மற்றும் விதைகள் பயனுள்ள பகுதியாகும். தண்டு பகுதியில் இருந்து நார் பிரித்தெடுக்கப்படுகிறது.
பாங், கஞ்சா, சரஸ்
பாங், கஞ்சா, சரஸ் போன்ற மூன்று வகையான மருந்துகள் இத்தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
உலர்த்தப்பட்ட இலைகள் பாங் எனப்படும். இது கரும்பச்சை வண்ணத்தில் காணப்படும். பெண் தாவரங்களின் மலர்கள் அல்லது கனிகள் கொண்ட பிசின் அகற்றப்படாத நுனிப்பகுதிகள் கஞ்சா எனப்படும். இது குறிப்பிட்ட வாசனை கொண்டது. இலைகளை கசக்கி அதிலிருந்து பெறப்பட்ட பிசின் போன்ற பொருளே சரஸ் எனப்படும். இது கரும்பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.
மனநோய்க்கு மருந்து
பாங் மற்றும் கஞ்சா பசி தூண்டுவி. நரம்பு செயல் தூண்டுவி. இது மலமிளக்கியாகவும் தரப்படுகின்றன. பாங்குடன் பால், சர்க்கரை, நீர் சேர்த்து போதை தரும் பானமான மாஜூம் தயாரிக்கப்படுகின்றது.
மனமாறாட்டம், மனநோய், ஆகியவற்றிர்க்கு மருந்தாக சரஸ் சிபாரிசு செய்யப்படுகிறது. இது ஆஸ்துமா, டெட்டனஸ் போன்ற நோய்களுக்கு மருந்தாகிறது. இது அபின் போன்றே பயன்படுத்தப்படுகிறது. அபின் பயன்படுத்தப்படும் மகப்பேறு மருத்துவம், மூட்டுவலி, மாதவிடாய், முடக்குவாதமென அனைத்திற்கும் மருந்தாகிறது. ஆனால் அபின் போன்று பயன்பாட்டிற்குப் பின் ஏற்படும் பின்விளைவுகள் அற்றது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கிறது. மனச்சோர்வு போக்கும். தூக்கத்தை தூண்டுவதாக இது பயன்படுகிறது.
மலச்சிக்கலை போக்குகிறது
இலைகளின் சாறு பூச்சிகளை அழிக்கின்றது. விதைகள் சிறந்த மலமிளக்கி. குறிப்பாக முதியவர்களின் மலச்சிக்கலை போக்க வல்லது. இதில் காணப்படும் polyunsaturated கொழுப்பு அமிலங்கள் சிறந்த துணை உணவாக பயன்படுகிறது. இத்தாவரம் கிளாக்கொமா, உயர் ரத்த அழுத்தம், போக்க பயன்படுகிறது. தாவரத்தின் கசாயம் இரத்த வயிற்றுப்போக்கினைத் தடுக்கிறது.
அண்மைக்கால ஆய்வுகள் கஞ்சா தாவரத்தில் காணப்படும் செயல் ஊக்கப் பொருட்களைப் பிரித்தெடுத்துள்ளன. இவை வாந்தியை தடுக்கக் கூடியது. வேதி மருத்துவம் பெறும் புற்றுநோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. மேலும் தண்டுவட பாதிப்பு, கால்வலிப்பு, தொடர்வலிகள் மற்றும் பசியின்மைக்கும் சிறந்த மருந்தாகிறது.