மஸ்கட் தமிழ்ச் சங்கம் நடத்திய ‘கதம்ப மாலை’ பல்சுவை நிகழ்ச்சி
ஓமான் நாட்டில் உள்ள இந்திய சமூக சங்கத்தின் கீழ் அமைந்துள்ள அனைத்து மொழிசார்ந்த சங்கங்களிலும் மிகவும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட மஸ்கட் தமிழ்ச் சங்கம் 2000-க்கும் அதிகமான குடும்ப நபர் எண்ணிக்கையையும் கொண்டது.
மஸ்கட் தமிழ்ச் சங்கம் 'கதம்ப மாலை" என்ற பல்சுவை நிகழ்ச்சியை சமீபத்தில் மஸ்கட் 'அல்-ஃபலாஜ் லீ கிராண்ட்" ஹாலில் நடத்தியது. இசை, நடனம், தமிழில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, நா தடுமாறாமல் தமிழ் பேசும் போட்டி என நடைபெற்ற போட்டிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர், குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ் சங்கத்தின் புகழ்பெற்ற பாடகர்களின் மெல்லிசை நிகழ்ச்சியும், சிறந்த நடனக் குழுவினர்களின் குழு நடனங்களும் காதுக்கும், கண்ணுக்கும் விருந்தளித்தன.
போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்ச் சங்கக் குழந்தைகளுக்கும், போட்டியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சங்க உறுப்பினர்கள் அதிக அளவில், பேரார்வத்துடன் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழ் வகுப்பு மாணவர்களின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. ஜானகிராமன் அவர்கள் வரவற்புரை ஆற்றினார். சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துணைத் தலைவர் திரு. அகமத் ஜமீல் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
மஸ்கட் தமிழ்ச் சங்கம், 5000-க்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சிகளை வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறையும், மாதம் ஒரு நிகழ்ச்சியையும் ஆண்டுதோறும் அரங்கேற்றி வருவது பெருமைக்குரிய விஷயம்.