மீனாட்சி அம்மனுக்கு கோலாகல பட்டாபிஷேகம்: மதுரையில் கோலாகலம்
மதுரை: நேற்றிரவு மதுரை மீனாட்சியம்மனுக்கு பாட்டாபிஷேகம் சிறப்பாக நடந்தது. பட்டத்து அரசியாக அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வந்தார்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இதில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பட்டாபிஷேகம் நேற்று நடந்தது.
மீனாட்சி அம்மனுக்கு கிரீடம் அணிவித்து, செங்கோல் கொடுக்கும் பட்டாபிஷேக விழா நேற்று மாலை 6 மணிக்கு விக்னேசுவரர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்ட பின், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலில் உள்ள அனுக்ஞை விநாயகரிடம் இருந்து செங்கோலும், கிரீடமும் பெறப்பட்டு, மாலை 6.20 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டப்பட்டது.
அப்போது மஞ்சள் புடவை அணிந்திருந்த மீனாட்சி அம்மனுக்கு பச்சை பட்டால் ஆன பரிவட்டம் கட்டப்பட்டது. மீனாட்சி அம்மனுக்கு உகந்த வேப்பம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோல், மீன் கொடி மீனாட்சி அம்மனுக்கு வழங்கப்பட்டது. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து 4 மாசி வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வந்தார்.