சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை: பக்தர்கள் கூட்டம்
சபரிமலை: சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை நடக்கிறது. பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியைப் பார்க்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சபரிமலையில் இன்று நடைபெற உள்ள மகரவிளக்கு பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரமான மாலை 6.44 மணிக்கு ஐயப்பனுக்கு மகர சங்கரம பூஜை நடைபெறுகிறது.
இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் நெய் கொண்டு பகவானுக்கு அபிஷேகம் செய்யப்படும். இதைத் தொடர்ந்து கடந்த 12-ம் தேதி பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரணங்கள் சன்னிதானம் வந்து சேரும்.
அதை தந்தரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி சசி நம்பூதரி வாங்கி ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடத்துவர். இதையடுத்து பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும்.
மகரவிளக்கை காண சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பம்பையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 15 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் நிற்கின்றன.
இன்று பகல் 1 மணி முதல் பத்தினம்திட்டாவில் இருந்து சபரிமலைக்கு கேரள அரசு பஸ் அல்லாத வாகனங்கள் அனுமதிக்கப் பட மாட்டாது என அறிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு்ள்ளது.