குற்றாலத்தில் சீசன் ஜோர்-அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு
குற்றாலம்: குற்றாலம் பகுதியில் சாரல் மழை தீவிரமடைந்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 4 தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் படிப்படியாக தண்ணீர் அதிகரித்து வருகிறது. குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவு முதல் தண்ணீர் அதிகரித்து பாதுகாப்பு வளைவு பகுதியை தாண்டி விழுகிறது.
அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட நேற்று அதிகமாக காணப்பட்டனர்.
ஐந்தருவியில் 5 கிளைகளிலும் ஆர்ப்பாரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பழைய குற்றாலத்தில் தண்ணீர் குறைவாக விழுந்த நிலையில் நேற்றிரவு பெய்த சாரல் மழை காரணமாக தண்ணீர் சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது.
புலியருவியில் அதிகமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலின்றி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.