நாளை செம்மொழி விருது வழங்கும் விழா-மு.இளங்கோவனுக்கு இளம் அறிஞர் விருது
டெல்லி: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், மத்திய அரசு வழங்கும் செம்மொழி் விருதுகள் நாளை டெல்லியில் வழங்கப்படுகின்றன. குடியசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் விருதுகளை வழங்குகிறார். பேராசிரியர் அடிகளாசிரியர் தொல்காப்பியர் விருது பெறுகிறார்.செம்மொழி இளம் அறிஞர் விருதுக்கு புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நாளை விருது வழங்கப்படுகிறது.
தமிழ்மொழியை இந்திய அரசு செம்மொழி என்று அறிவித்துள்ளது (2004). இதன் பயனாகச் செம்மொழித் தமிழாய்வுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் செம்மொழி இலக்கியங்களில் ஆய்வு செய்த அறிஞர்களுக்குச் சிறப்பு செய்யும் நோக்கில் பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் தொல்காப்பியர் விருது பெறப் பேராசிரியர் அடிகளாசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செம்மொழி இளம் அறிஞர் விருதுக்கு (2005-2006, 2006-2007, 2007-2008) இளம் அறிஞர்கள் பதினைந்துபேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு விருது வழங்கும் விழா வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குப் டெல்லியில் அமைந்துள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறுகின்றது.
விருது பெறுவதற்குரிய தமிழறிஞர்கள் அனைவரும் சென்னையிலிருந்து டெல்லி வந்து சேர்ந்துள்ளனர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி, ஆய்வறிஞர் கு.சிவமணி உள்ளிட்ட அதிகாரிகள் தமிழறிஞர்களை அழைத்துச்சென்றனர்.
பேராசிரியர் நன்னன், பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் உள்ளிட்ட தமிழறிஞர்களும் உடன் சென்றுள்ளனர். இவர்களுடன் செம்மொழி இளம் அறிஞர் விருது பெறும் அறவேந்தன், மணிகண்டன், மு.இளங்கோவன், அரங்க.பாரி, செல்வராசு, ஆண்டவர், கலைவாணி, சந்திரா, பழனிவேலு, மணவழகன் உள்ளிட்ட பேராசிரியர்களும் சென்றுள்ளனர்.