ஹூஸ்டனில் தமிழ்நாடு ஃபவுண்டேஷனின் மாநாடு: எஸ்பி முத்துராமன், சுகாசினி பங்கேற்பு!
1974 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி, மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோரில் நான்கு டாக்டர்கள் குடும்பம், ‘அமெரிக்க நன்றியுரைத்தல் (Thanks Giving) நிகழ்வாக’ ஒன்றாக உணவருந்திக் கொண்டிருந்த போது, தமிழகத்தில் உள்ள குறைகளை பற்றி ஆண்கள் சொல்லிக்கொண்டிருக்க, அவர்களது மனைவிமார் ‘ இவ்வளவு சொல்ற நீங்க தமிழ்நாட்டுக்கு என்ன பண்றீங்க? என்று ஒரே குரலில் கேட்ட கேள்விக்கு விடையாக உதித்தது தான் தமிழ்நாடு ஃபவுண்டேஷன்.
டாகடர்.ஆர்.பழனிசாமி, டாக்டர்.பி.ஜி.பெருமாள்சாமி, டாக்டர்.பி.தியாகராஜன் மற்றும் டாக்டர்.பி.ஜி.பெரியசாமி ஆகியோரால் முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தன்னார்வ அமைப்பு அமெரிக்கா முழுவதும் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழ்நாட்டு நலன் மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுகிறது.
எம்ஜிஆர் ஆசி...
தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கல்வியை முன்னிலைப்படுத்தி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்கள். அன்றைய முதல்வர் அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ்நாடு ஃபவுண்டேஷனின் தமிழக நலத்திட்டங்களை ஊக்குவிக்கும் பொருட்டு சென்னை கீழ்பாக்கம் டைலர் சாலையில் அலுவலகத்திற்காக நிலம் ஒதுக்கிக்கொடுதார். அங்கே கட்டப்பட்ட கட்டிடத்தில் தமிழக அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடத்தப்படும மாநாடுகள் கலை, இலக்கிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக மட்டுமல்லாமல், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் அமெரிக்க வாழ் தமிழர்களுக்கிடையே புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வாய்ப்பாகவும் அமைகிறது. புதிய திருமண பந்தங்களும் இந்த மாநாடுகள் மூலம் உருவாகுவது இன்னொரு சிறப்பம்சமாகும். ஒவ்வொரு மாநாடும் ஒரு நலத்திட்ட குறிக்கோளுடன் நடத்தப்பட்டு கிடைக்கப்பெறும் நன்கொடைகள் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்ற கோட்பாட்டுடன் பள்ளி செல்லும் குழந்தைகள் இடையில் படிப்பை நிறுத்திவிடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் திட்டங்கள் தீட்டப்பட்டு 37ஆம் மாநாடு நடைபெறவிருக்கிறது.
இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் இலக்கிய, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், நட்சத்திர பிரபலங்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகிறது. மேலும் டாக்டர்களுக்கான தொடர் கல்வி பயிலரங்கம், இளைஞர் கருத்தரங்கம், தொழில் முனைவோர் கருத்தரங்கம், தொழில் கண்காட்சி மற்றும் எக்ஸ்போ, டி.என்.எஃப் ஐடல்(TNF Idol) உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம் பெறவிருக்கிறது.
தமிழகத்திலிருந்து எஸ்.பி.முத்துராமன், சுகாசினி மணிரத்னம், புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி, பர்வீன் சுல்தானா, கு.ஞானசம்பந்தம், உமையாள் முத்து போன்ற பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். இளம் திரையிசை கலைஞர்களான சைந்தவி, ஹரிசரண், ராகுல் நம்பியார் ஆகியோர் புதிய, பழைய பாடலகளை பாடி மகிழ்விக்க வருகிறார்கள்.
தமிழகத்திலிருந்து பிரபல தொழில் நிறுவனங்களும் ஸ்டால்கள் அமைத்து மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
டி.என்.எஃப் ஐடல் பாட்டுப்போட்டி டெக்சாஸ் மாகாணம் முழுவதும் ஹூஸ்டன், டல்லாஸ், ஆஸ்டின், காலேஜ் ஸ்டேஷன், சான் அன்டோனியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. பதினெட்டு வயதிற்குற்கு கீழே உள்ளவர்களுக்கு டி.என்.எஃப் ஜுனியர் ஐடல் என்ற தனிப்பிரிவு உண்டு. இந்த பாட்டுப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் ஜனவரி 5ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களை www.tnfconvention.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மாநாட்டிற்கான ஏற்பாட்டை திரு.கண்ணப்பன், டாக்டர் பத்மினி, டாக்டர் வடுகநாதன், திரு.ராஜன், டாக்டர். அப்பன், திரு.ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் தலைமையில் பல்வேறு குழுக்களாக தன்னார்வ தொண்டர்கள் இணைந்து செய்து வருகிறார்கள்
டெக்சாஸ் மாகாணம் மட்டுமில்லாமல் அமெரிக்கா முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் குடும்ப சகிதமாக ஒன்று கூடும் நிகழ்வாக இந்த மாநாடு அமையவிருக்கிறது.