கேரளாவில் தொடங்கியது தென் மேற்குப் பருவமழை-2 நாட்களில் தமிழகத்தில்
திருவனந்தபுரம்: தென் மேற்குப் பருவ மழை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே கேரளாவில் மழை தொடங்கி விட்டது. அதேபோல லட்சத்தீவிலும் இன்று மழை தொடங்கியது. இன்னும் ஓரிரு நாட்களில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையத் தகவல் கூறுகையில்,
அந்தமானி்ல் இன்றோ அல்லது நாளையோ தென்மேற்கு பருவமழை துவங்கலாம். அடுத்த மூன்று நாட்களில் அதாவது ஜூன் முதல் தேதி கேரளாவில் பருவ மழை துவங்கி விடும். அதற்கேற்ற சாதகமான சூழ்நிலைகள் உள்ளன.
அந்தமானி்ல் வழக்கமாக மே 15ம்தேதி முதல் 20ம் தேதிக்குள் பருவமழை துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக துவங்குகிறது. இந்த தாமதத்தால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்குவதில் பிரச்சனை ஏற்படாது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றே கேரளாவிலும், லட்சத்தீவிலும் தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விட்டது.
இந்த மழை மேலும் விரிவடைந்து கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த ஓரிரு நாட்களில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை தொடங்கியிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தி்ல பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என கேரளாவுக்கு வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவின் சில பகுதிகளில் மிக கனத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மே 31ம் தேதி வரை லட்சத்தீவில் 7 செமீ அளவிலான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் சாரல்
பருவ மழையின் தொடக்கமாக, நெல்லை மாவட்டம் குற்றாலம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் சாரல் மழை பெய்தது. சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.