லண்டனில் தமிழர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்
லண்டன்: லண்டன் வாழ் தமிழர்கள் புத்தாண்டை ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடினர்.லண்டன் மாநகரில் வசிக்கும் தமிழ் இளைஞர்கள் ஆங்கில புத்தாண்டை வரவேற்க "புத்தாண்டு 2011" என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். டிசம்பர் 31ம் தேதி இரவு லண்டன் தமிழ் சங்க அரங்கில் நடந்த இந்த விழாவுக்கு நடன நிபுணர் பாக்ஸர் மணி தலைமை தாங்கினார்.
"ராக்கிரிஷ்" ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளை "இசை தென்றல்" ராஜேஷ் தொகுத்து வழங்கினார்.
சிறார்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. வரலாற்று ஆய்வாளரான ஞானி சக்திவேல் "2011ல் இளையோர் கடமை" என்ற தலைப்பில் இளையோர்களை கவரும் வகையில் பேசினார்.
கிருஷ்ணகுமாரின் நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணை எட்டியது. சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளை "சிஐடிஐ" பூங்குன்றன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
பெரியவர்களுக்கான பாட்டுக்கு பாட்டு போட்டியை "ஹோண்டா" செல்வம் நடத்தி வைத்தார். கடந்த 2010ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை கோவிந்து வழங்கினார்.
விழாவின் இறுதியில் 2011ல் உலகம் அமைதியை பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை நடைப்பெற்றது.