துன்பத்தில் கைகொடுப்பது தான் உறவு
ஒரு அடர்ந்த வனப்பகுதியில் நன்கு செழித்து வளர்ந்த பழ மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் ஏராளமான பறவையினங்கள் வசித்து வந்தன. அந்த மரத்தின் பொந்தில் கிளி ஒன்றும் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் வேடன் ஒருவன் மரத்தில் இருந்த பறவையை நோக்கி விஷம் தடவிய அம்பை எய்தான். அந்த அம்பு குறி தவறி மரத்தின் மீது பட்டது.
இதனால் மரம் சிறிது சிறிதாக பட்டுப்போக தொடங்கியது. மரத்தில் இலைகள் உதிர்ந்து, முற்றிலும் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டவுடன் அதில் வசித்து வந்த பறவையினங்கள் எல்லாம் வேறு இடம் தேடி போக ஆரம்பித்தன. ஆனால் பொந்தில் இருந்த பச்சைக்கிளி மட்டும் எங்கும் செல்லாமல் தன்னைத்தானே வருத்திக்கொள்ள ஆரம்பித்தது.
இந்திரனின் வரம்
ஒருநாள் தேவலோகத் தலைவன் இந்திரன் அந்த வனப்பகுதியை கடந்த சென்றார். அப்போது பட்டமரத்தில் பச்சைக்கிளி ஒன்று உயிரை விடும் தருவாயில் இருப்பதைக்கண்டு அதன் அருகில் சென்றான் இந்திரன்.
' ஏ கிளியே இந்த கானகத்தில் எத்தனையோ மரங்கள் இருக்க இந்த பட்ட மரத்தில் வசிக்கிறாய் ' என்று கேட்டார்.
அதற்கு அந்த கிளி ' இந்த மரம் பசுமையாக இருந்தபோது எனக்கு உண்ணுவதற்கு கனிகளையும் வசிக்க இருப்பிடமும் தந்தது. இப்போது பட்டுப்போன காரணத்தால் மரத்தை விட்டுச்செல்வது நியாயமாகாது" என்று கூறியது கிளி.
கிளியின் பேச்சில் மகிழ்ந்த இந்திரன் ' உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் ' என்று கேட்டான்.
அப்போது அந்த கிளி தனக்காக எதுவும் கேட்காமல் பட்டுப்போன மரம் மீண்டும் நன்றாக செழித்து வளரவேண்டும் என்று இந்திரனிடம் வரம் கேட்டது.
உடனே கிளியின் ஆசையை நிறைவேற்றி விட்டு இந்திரன் தேவலோகம் சென்றான். மரம் முன்பு போலவே பசுமையாக தழைக்க ஆரம்பித்தது.
உறவின் உன்னதத்தை உணர்த்தும் இந்த கதை மனிதர்கள் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியது இன்றியமையாதது.