சந்திரகிரகணம் : திருப்பதி கோவில் பகலில் நடை அடைப்பு – சேவைகள் ரத்து
திருமலை: சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று பகலில் நடை அடைக்கப்படும் என திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சந்திர கிரகணம் ஏற்படும் நேரம், துஷ்ட நேரமாக கருதப்படுவதால், அந்த சமயத்தில் அனைத்து கோவில்களும் அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் சந்திர கிரகணத்தன்று நடை அடைக்கப்பட உள்ளது.
சேவைகள் ரத்து
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை சுப்ரபாத சேவை மட்டும் நடைபெறும். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், மாதாந்திர கருட சேவையும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ரத்து செய்யப்படுகிறது.
12 மணிக்கு நடை அடைப்பு
இன்று காலை 6 மணி வரை மட்டுமே வைகுண்டம் கியூ காம்ளக்ஸ்-2 வளாகத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் காலை 6.30 மணி முதல் பகல் 11.30 மணி வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். அதைத் தொடர்ந்து மூலஸ்தானம் மற்றும் தேவஸ்தானத்தின் அனைத்து சன்னதிகளும் மூடப்பட்டு, பகல் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டுவிடும்.
இன்று இரவு 10.30 மணிக்கு மேல் வைகுண்டம் கியூகாம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நாளை (11-ந் தேதி) அதிகாலை தோமால சேவை, அர்ச்சனை மற்றும் ஏகாந்த சேவை ஆகியவை முடிந்த பின்னர் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பரிகார பூஜைகள்
சந்திர கிரகணம் முடிந்த பின்னர், இரவு 10.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதைத் தொடர்ந்து கோவில் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு புண்ணியாவசனம், சுத்தி உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்பின்னர் 11.30 மணிக்கு மேல் கார்த்திகை தீப உற்சவம் நடைபெறும் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.