களக்காடு வன விலங்குகள் எண்ணிக்கை இரட்டிப்பு: கள இயக்குனர் தகவல்
களக்காடு: களக்காடு புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது என, கள இயக்குனர் மல்லேசப்பா தெரிவித்தார்.
களக்காடு புலிகள் காப்பகம் சார்பில் சேரன்மகாதேவி தொழில்நுட்ப கல்லூரியில் வனவிலங்குகள் வார விழா நடந்தது. களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வன பாதுகாவலருமான மல்லேசப்பா தலைமை வகித்து பேசியதாவது, நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.
ஆனால் அதற்கேற்ப காடுகளின் பரப்பளவு அதிகரிக்கவில்லை. இதனால் தான் வன விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. வன விலங்குகளையும், வனத்தையும் பாதுகாப்பது நமது கடமை. இந்தியாவில் 37 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் தலைசிறந்தவையாக 13 புலிகள் காப்பகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதில் களக்காடு புலிகள் காப்பகமும் ஒன்று. ஏ கிரேடு பெற்றுள்ள களக்காடு புலிகள் காப்பகத்தை பாதுகாப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியாமாகும். வன விலங்குகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது.
களக்காடு புலிகள் காப்பகத்தில் கடந்த 2008ல் நடத்த கணக்கெடுப்பின்படி 6 முதல் 8 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 2010ம் ஆண்டு கணக்கெடுப்பில் புலிகள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் மற்ற வனவிலங்குகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது, என்றார்.