பராம்பரிய கலை நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் வருமா?
நெல்லை: நெல்லை மண்டல கலை பண்பாட்டு துறை மாவட்ட கலை மன்றம் ஆகியவற்றின் சார்பில் பொதிகை தென்றல் கலை விழா நடத்தப்பட்டு வருகிறது.
பாரம்பரிய கலைகளை மக்கள் மறந்து விடக் கூடாது, கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஊக்கம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உரிய பயிற்சி அளித்து இவ்விழா மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது. இடையில் நிதிப்பற்றாக்குறையால் நின்று போன இவ்விழா மீண்டும் நிதி கிடைக்க பெற்றவுடன் புத்துயிர் பெற்றுள்ளது.
கோடை விடுமுறையில் குதூகுலமாக இருக்கவே மாணவ சமுதாயமும், பொதுமக்களும் விரும்புவர். தனியார் நிறுவனங்கள் அதற்கு ஏற்றர்போல் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகளை நடத்தி கூட்டத்தை சேர்ப்பதோடு, லாபத்தையும் பார்த்து விடுகின்றனர். ஆனால் இந்த கலைவிழாவில் பராம்பரியம் என்ற பெயரில் சில நடைமுறைகளை பின்பற்றுவதால் கூட்டம் சேர்ப்பதற்குள் அதிகாரிகள் படாதபாடு பட வேண்டியுள்ளது.
மங்கள இசை, வில்லு பாட்டு, கரகம், தப்பட்டம், கணியன்கூத்து, மயிலாட்டம், ஓயிலாட்டம், என பல வகை கலை நிகழ்ச்சிகள் இருந்தாலும் வரிசை கிரமமாக நிகழ்ச்சி தொகுப்பது என்பது மிகவும் அவசியமாகும். கூட்டம் சேர்ப்பதற்குரிய கலை நிகழ்ச்சிகளை முதல் வரிசையிலும், இடையிடையே காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள கலை உள்புகுத்தினால் மட்டுமே விழா சிறக்கும்.
ஆனால் முன்னுக்கு பின் முரணாக நிகழ்வுகள் அமைவதால் விழா முடியும் வரை இருக்கைகள் நிரம்புவதில்லை.
பாளை வஉசி மைதானத்தில் நடந்த விழாவில் கலெக்டர் ஜெயராமன் உள்ளிட்ட ஒரு சிலரே நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். மற்றப்படி மைதானம் முழுவதும் ஆட்கள் பரவி கிடந்தாலும் விழா இருக்கைக்கு வர யாரும் முன்வரவில்லை.
எனவே பராம்பரிய கலைகளை காப்பாற்றும் அதே வேளையில் பார்வையாளர்களை கவரும் வகையில் விழா நிகழ்வுகள் சிற்சில மாற்றங்களோடு செய்ய வேண்டும். இல்லையேனில் கொண்ட நோக்கம் நிறைவேறாது என்பதை சமூக ஆர்வலர்களின் கருத்து.