கன்னடத்தைத் தொடர்ந்து கேரளாவில் தமிழில் எழுத்தறிவுத் திட்டம் அமல்
திருவனந்தபுரம்: கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் கன்னடத்தில் எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்பட்டு அது வெற்றியடைந்திருப்பதால் தற்போது தமிழர்களின் நலனுக்காக தமிழில் இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது கேரள அரசு.
இந்தத் திட்டத்தை கேரள அரசின் மாநில எழுத்தறிவுத் திட்ட ஆணையம் அமல்படுத்துகிறது. இந்த திட்டப் படிப்பானது 10ம் வகுப்புக்குச் சமமானதாகும். இந்த ஆண்டிலிருந்து தமிழில் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து ஆணைய இயக்குநர் அலசன் குட்டி கூறுகையில், தமிழ் மக்களிடமிருந்து தமிழ் மீடியத்தில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பெருமளவில் கோரிக்கை வந்ததால், தமிழில் இத்திட்டத்தை அமல்படுத்துகிறோம்.
கேரளாவில் தமிழ் மக்கள் பெருமளவில் உள்ளனர். அவர்களுக்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என்றார்.
இந்தத் திட்டத்திற்காக மலையாளப் பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணி தொடங்கியுள்ளது. இதை 2 கட்டமாக செய்யவுள்ளனராம்.
கடந்த ஆண்டு கன்னட மொழி பேசுவோர் அதிகம் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் கன்னட மீடியத்தில் இந்தத் திட்டத்தை கேரள அரசு தொடங்கியது நினைவிருக்கலாம்.