துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் இலவச கணினி பயிலரங்கம்
துபாய்: துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம் நடந்தது.அந்த பயிலரங்கில் தமிழைக் கணினியில் உள்ளிடுவது குறித்த பயிற்சியோடு தமிழ் இணைய வரலாறு, கணினியில் தமிழ்ப் பயன்பாட்டின் வளர்ச்சி, தமிழில் கிடைக்கும் பிற சேவைகள் ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது.
பெனாசிரின் அறிமுக உரையோடு நிகழ்ச்சி துவங்கியது. அதையடுத்து தமிழில் எழுத்துருக்கள் இன்று ஒருங்குறியில் வந்து நிற்பது வரையிலான வரலாற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் அமீரகத் தமிழ் மன்றத்தின் ஆலோசகர் ஆசிப் மீரான் எடுத்துரைத்ததோடு, கணினிப் பயன்பாட்டில் தமிழின் வளர்ச்சி பற்றியும், கணினியில் தமிழ் எவ்வாறு பரவலாக உபயோகிக்கப்படலாம் என்பது குறித்தும் விளக்கினார்.
மடிக்கணினிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களும் நேரடியாகப் பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கணினியில் நேரடியாகவே தமிழை உள்ளீடு செய்து மகிழ்ந்தனர்.
முன்னதாக அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவச மென்பொருட்களை உள்ளடக்கிய குறுந்தகடும், தமிழைக் கணினியில் உள்ளீடு செய்வதற்கான பயிற்சிக் கையேடும் இலவசமாக வழங்கப்பட்டது.
வலைப்பூக்கள் குறித்த அறிமுகம், வலைப்பூவைத் துவங்குவது மற்றும் திரட்டிகளில் இணைப்பது குறித்த விளக்கத்தையும், செய்தியோடைகள் குறித்தும் சுரேஷ் விரிவாக எடுத்துரைக்க, ஃபயர்ஃபாக்ஸ் உலவி மூலமாகத் தமிழில் நேரடியாகத் தமிழில் எழுதுவது, எழுத்துரு மாற்றிகள் போன்ற பிற சேவைகளைக் குறித்து ஆசிப் மீரான் விளக்கவுரை வழங்கினார்.