அருணாசலத்தில் வற்றிய பிரம்மபுத்திரா- ஆய்வு நடத்துகிறது பாஜக
டெல்லி: அருணாசலப்பிரதேச மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதி திடீரென வற்றிப் போன மர்மம் குறித்து ஆய்வு நடத்த பாரதிய ஜனதா கட்சி குழு ஒன்றை அமைத்துள்ளது.
வற்றிய நதி
இந்தியாவின் ஆண்நதி என்று அழைக்கப்படுகிற பெருநதியான பிரம்மபுத்திராவின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகிவிட்டது. எந்தக் காலத்திலும் வற்றிய வரலாறே இல்லாத பிரம்மபுத்திரா அருணாசலப்பிரதேசத்தின் பசிகாட் என்ற இடத்தில் வற்றிப்போய்விட்டது.
சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள திபெத்தில்தான் இந்த நதி உற்பத்தியாகிறது. அங்கிருந்து அருணாச்சல் பிரதேசம் வழியாக இது இந்தியாவுக்குள் நுழைந்து, அசாம் ஊடாக ஓடி, பின்னர் வங்கதேசம் வழியாக இது கடலில் கலக்கிறது.
பிரம்மபுத்திரா நதி நீரை சீனா தமது நாட்டுத் தேவைகளுக்காக திசை திருப்பிக் கொண்டதாலும் பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரம்மாண்ட அணை கட்டுவதாலும் இந்நிலைமை உருவாகியுள்ளது.
சர்வதேச நதிநீர்தாவா சட்டங்களின் கீழ் சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக இந்தியா வழக்குத் தொடரலாம் அல்லது பேச்சுவார்த்தை மூலம் பிரம்மபுத்திரா நதிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம். ஆனால் மத்திய அரசு இவ்விவகாரத்தில் மெத்தனம் காட்டுகிறது என்பதே வடகிழக்கு மாநிலத்தவரின் குற்றச்சாட்டு.
பிரம்மபுத்திரா அசாம் மாநிலம் முழுவதும் பாய்ந்தோடி வங்கதேசத்தில் கடலில் சங்கமிக்கிறது. பிரம்மபுத்திரா நதிக்கரையோரத்தில்தான் உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத் தீவான மஜூலி தீவும் இருக்கிறது. அரியவகை விலங்கினமான காண்டாமிருகங்களும் வாழ்கின்றன. அசாமின் பொருளாதார பின்புலமாக பிரம்மபுத்திரா நதிதான் இருந்துவருகிறது.
பாஜக குழு
இந்நிலையில் பிரம்மபுத்திரா வற்றியது குறித்து ஆய்வு நடத்த தபீர் கோய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை பாஜக தலைவர் நிதின்கட்காநி நியமித்துள்ளார்.
அருணாசலப்பிரதேசத்தின் பசிகாட்டுக்குச் சென்று பிரம்மபுத்திரா நதி வற்றியது குறித்து இக்குழு ஆய்வு நடத்தும்.