லண்டன் தமிழ்சங்கம் சார்பில் முதியவர்களுக்கான கிறிஸ்துமஸ் விழா!
லண்டன்: லண்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் முதியோருக்கான கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
லண்டன் தமிழ்சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக முதியோர் மதிய உணவுத் திட்டத்தை லண்டனிலுள்ள தமிழ் முதியவர்களுக்காக திறம்பட செயல்படுத்தி கொண்டு வருகின்றது. இத்திட்டத்தை முதன்முறையாக வெளிநாட்டில் அறிமுக படுத்தி எவ்வித தொய்வும் இல்லாமல் சீரும் சிறப்புமாக நடத்தி கொண்டு வரும் பெருமை லண்டன் தமிழ்ச் சங்கத்தையே சாரும்.
இத்திட்டத்தின் மூலம் பல முதியவர்கள் லண்டன் ஈஸ்ட்ஹாமிலுள்ள தமிழ் சங்கத்தில் ஒன்று கூடி கருத்து பரிமாற்றம் & விவாதம்,மருத்துவ ஆலோசனை, உடற்பயிற்சி வகுப்புகள், நகைச்சுவை அரங்கம் மற்றும் சமுதாய உறவறிதல் மூலம் மிகுந்த நன்மை அடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் லண்டன் தமிழ்சங்கம் பல விழாக்கள் மற்றும் இன்பச் சுற்றுலாவை ஏற்படுத்தி முதியவர்களை மகிழ்வுற செய்கின்றது.
இந்த ஆண்டு முதியவர்களுக்கான கிறிஸ்துமஸ் விழா இலண்டன் தமிழ் சங்க இயக்குனர்கள் தலைமையில் தமிழ் சங்க அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடபட்டது. இந்த விழாவில் தமிழ் கருத்தரங்கம், பாட்டுக்கு பாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் முதியவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு பெற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அறுசுவை உணவு வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது.