ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக நடந்த துபாய் தமிழ்ச் சஙகத்தின் 11வது ஆண்டு விழா
துபாய்: அமெரிக்கன் கார்டன் நிறுவனத்தின் ஆதரவுடன் துபாய் தமிழ்ச் சங்கத்தின் 11வது ஆண்டு விழா 02.11.2012 அன்று மாலை துபாய் இந்தியப் பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் இசை நிகழ்ச்சி, நடனம் என பல்சுவை நிகழ்ச்சியாக வெகு சிறப்பாக நடைபெற்றது.
துபாய் தமிழ்ச் சங்கத்தின் 11வது ஆண்டு விழா அதன் தலைவி ஜெயந்திமாலா சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஜெகநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமீரக தேசிய கீதம், இந்திய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவை பாடப்பட்டன. பின்னர் அம்ருதா கிரிவாசன், சக்தி பாலகிருஷ்ணன் மற்றும் ஹம்ரிஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் திருக்குறள் வாசித்து அதன் விளக்கவுரையினை அளித்தனர். ஜனனி சுரேஷ் இன்று ஒரு தகவல் வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மாலதி லக்ஷ்மண், ஷ்யாம், ரவிசங்கர், பிரியா, சந்திரா கீதா கிருஷ்ணன், கோகுல் கிருஷ்ணன் ஆகிய பின்னணி பாடகர்கள் பல்வேறு திரை இசைப் பாடல்களைப் பாடி பார்வையாளர்களைக் கவர்ந்தனர். சிங்கப்பூர் தேசிய கலைமன்றத்தின் ஆதரவுடன் கவிதா கிருஷ்ணன் மற்றும் இம்ரான் ஆகியோர் தலைமையில் வருகை புரிந்த மாயா நடனக் குழுவினரின் கண்கவர் நடனம் பரவசப்படுத்தக்கூடியதாய் அமைந்திருந்தது.
வளைகுடாப் பகுதியில் முதல் முறையாக தங்களது நடனத்தை அரங்கேற்றிய மாயா நடனக் குழுவினருக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டது. சின்னத்திரைக் கலைஞர்கள் ரோபோ சங்கர் மற்றும் அரவிந்த் ஆகியோரின் கலக்கல் காமெடி மாலைப் பொழுதினை மகிழ்விக்கக் கூடியதாய் அமைந்திருந்தது. பாடகர்கள், நடனக் கலைஞர்கள், காமெடி நடிகர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிங்கப்பூர் மாயா நடனக் குழு தங்களது நினைவுப் பரிசினை துபாய் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கியது.
அமெரிக்கன் கார்டன், ஈடிஏ அஸ்கான் ஸ்டார், பிளாக் டுலிப் பிளவர்ஸ், ராயல் செஃப், பாங்க் ஆஃப் பரோடா, அரப் லைட், வாஸ்டாக் உள்ளிட்ட அணுசரனையாளர்களும், ஜெயா டிவி, தினமலர், தட்ஸ் தமிழ்.காம், சூப்பர் 94.7 எஃப். எம். உள்ளிட்ட ஊடக நிறுவனங்களும் கௌரவிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமையில் லியாக்கத் அலி, ஜெகநாதன், கீதா கிருஷ்ணன், ஏ. முஹம்மது தாஹா, பிரசன்னா, சுந்தர், பாலா, விஜயராகவன், விஜயேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியை ஏ. முஹம்மது தாஹா, மீரா கிரிவாசன், ரோபோ சங்கர், அரவிந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.