37வது ஆண்டு விழா கொண்டாடிய துபாய் ஈமான் அமைப்பு
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் 37வது ஆண்டு விழா அமீரகத்தின் 41வது தேசிய தினமான டிசம்பர் 2ம் தேதி அன்று காலை முதல் மாலை வரை ஷார்ஜா ரயன் ஸ்டார் இன்டர்நேஷனல் ஸ்கூலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
துவக்கமாக ஈமான் அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் இறை வசனங்களை ஓதினார். துணைத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் கலந்து கொண்டு வாழ்த்துப்பா பாடினார். ஈமான் அமைப்பின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஈமான் அமைப்பின் புரவலர்கள் ஆலியா முஹம்மது டிரேடிங் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் ஷேக் தாவூது, அரேபியன் ஹோல்டிங் குழும பொது மேலாளர் ரவூஃப் அலி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். முதல் மற்றும் சிறப்புப் பரிசாக 32 இன்ச் கலர் டிவிக்கள் வழங்கப்பட்டது.
மேலும் அதிர்ஷ்டப் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான அணுசரனையினை ஈடிஏ அஸ்கான் குரூப், அரேபியா ஹோல்டிங்ஸ், ஆலியா முஹம்மது டிரேடிங், நூர் முஹம்மது அன் சன்ஸ், பாய்ண்ட் காலிமர் ஸ்கூல், அப்கிரேட் டயர்ஸ், ஆர்பிட் எக்ஸ்பிரஸ், பிளாக் துலிப் பிளவர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வழங்கியிருந்தன.
விழாவிற்கான ஏற்பாடுகளை முதுவை ஹிதாயத், ஹமீது யாசின், ஜமால் முஹ்யித்தீன், காதர், ஃபைஜுர், மைதீன், இலியாஸ், சாகுல் ஹமீது, சாதிக், பஷீர், அப்துல் ரசாக், சர்புதீன், ஜாஹிர், கியாதுதீன், நிஜாம் அக்பர் மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.