துபாய் தமிழ் பெண்கள் சங்கத்தின் 'நவரச மாலை' சிறப்பு நிகழ்ச்சி
துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் சார்பாக நவரச மாலை என்ற சிறப்பு நிகழ்ச்சி கடந்த 28ம் தேதி இந்தியா கிளப் உத்சவ் ஹாலில் நடைபெற்றது. இதில் சங்க உறுப்பினர்களை சங்கச் செயலாளர் காயத்ரி சந்திரசேகர் வரவேற்றார். கவிஞர் மனோன்மணியம் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து திரையில் ஒளிர, சங்க குழு உறுப்பினர்கள் அதை பார்த்து தமிழ்த்தாய் வாழ்த்தை பாடினர். துபாய் தமிழ் பெண்கள் சங்கத்தின் தலைவி மீனாகுமாரி பத்மநாதன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வாக, கிருஷ்ணன் தயாரித்த கொலு மின்னியது. நல்லி சில்ஸின் அழகிய வண்ணங்களிலான சில்க் பிளவுஸ் மற்றும் ஜாய் ஆலுக்காஸ் தங்கஷீல்டு கொண்ட கீ செயின் ஆகியவை அளிக்க, உறுப்பினர்களுக்கு தாம்பூலம் வழங்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை நினைவுப்படுத்து வகையிலான 'விநாயகர் வந்தனம்', சுஜாதா விஸ்வநாத்தின் எண்ணத்தில் செய்திகளை தெரிவிக்கும் பெட்டகமாக இருந்தது. ஒளவையாராக அஞ்சனா கிருஷ்ணன் வந்து, ஸ்ரீஜனனி விஸ்வநாத், சஞ்சனா பிரகாஷ், சிராவன் ஈஸ்வர், அகிலேஷ் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அற்புதமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
திருக்குறள் கூறிய அதித் பத்மநாதன், குறளின் வகை, தொகைகளை வகையாக கூறியதோடு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒவ்வொரு பாலிலிருந்தும் ஒரு குறளை எடுத்து கூறி அதற்கு விளக்கத்தையும் அளித்து அசத்தினார்.
செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதத்தில் பிறந்த தலைவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில், 'நினைவில் வாழும் நெஞ்சங்கள்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறு குழந்தைகள் தலைவர்களின் வேடம் அணிந்து வந்தது, மனதை கொள்ளை கொள்வதாக இருந்தது.
அவந்திகா விமல்குமார், அனந்திகா விமல்குமார் என்ற இரட்டையர்களின், ஜவஹர்லால் நேரு, டாக்டர். ராதாகிருஷ்ணன் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. துருவ் ஸ்ரீகாந், ராஜராஜ சோழனாக தோன்றி சோழ சாம்ராஜிய பெருமை கூறினார்.
பாக்யலட்சுமி தரணிகிருஷ்ணன், எம்.எஸ் சுப்புலட்சுமியாக தோன்றி 'காற்றினிலே வரும் கீதம்' பாடலை பாடினார். பாரதியாராக குட்டிப்பெண் சகானா சந்திரசேகர் தோன்ற, ஸ்ருதி சந்திரசேகர் அவரை குறித்து வாழ்த்திப் பேசினார்.
விஸ்வநாத் ராஜேஸ்குமார், வ.உ.சி.யாக வந்து 'திரை கடலோடியும் திரவியம் தேட' கப்பல் கட்டுவோம் என்று முழங்கினார். ஹாரிஸ் நடராஜ், கொடிகாத்த குமாரனாக வர, அதிதி கிருஷ்ணா நடராஜ் நாட்டு கொடியின் மரியாதையை குறித்து எடுத்துரைத்தார். ஹாரிஸ் நடராஜ், அறிஞர் அண்ணாவாக தோன்ற, ஸ்ருதிகமலம் நடராஜ், திராவிடம் குறித்த கருத்துகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஆயுர்கேர் ஆயுர்வேதிக் வெல்நெஸ் சென்டர், சாந்திகிரி ஆயுர்வேதிக் சென்டர், சீனியர் கன்சல்டண்ட் டாக்டர் சத்யநாராயணன் பிள்ளை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் ஆயுர்வேதம் என்றால் என்ன? நமது உடல் அமைப்பு, பஞ்சபூதங்களின் தாக்கம், முன்வினைத் தொடர்பு ஆகியவை குறித்து பேசினார்.
மேலும் சரும பாதுகாப்பிற்கான விழிப்புணர்வில் சருமங்களின் வகைகள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சரும பாதிப்பு, உணவின் வகை, அளவு, சரும பிரச்சனைகள் வருமுன் காப்பதற்கான வழிமுறைகள், வந்தபிறகு தடுக்கும் வழிமுறைகள், அழகுடன் மிளிர இயற்கையான வழிகள் என்று ஒவ்வொரு தலைப்பின் கீழும் பயனுள்ள கருத்துகளை தெரிவித்தார்.
சங்க உறுப்பினருக்கு பயனுள்ள கருத்துகளை தெரிவித்த டாக்டர் சத்யநாராயணனுக்கு, மீனா குமாரி பத்மநாதன் நினைவு பரிசை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்து முடிவு வரை ரமாமலர்வண்ணன் சிறப்பாக நடத்தி சென்றார்.
முடிவாக நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு, டாக்டர் சத்யநாராயணன் பிள்ளை பரிசுகளை வழங்கினார். காயத்திரி சந்திரசேகர் நன்றி தெரிவித்த பிறகு, சங்க உறுப்பினர்களுக்கு சுவையான உணவு வழங்கப்பட்டது. அனைவரின் நினைவிலும் என்றும் நிற்கும் நிகழ்ச்சியாக நவரச மாலை அமைந்தது.