ராகு - கேது பெயர்ச்சி விழா திருநாகேஸ்வரம் கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் லட்சார்ச்சனை தொடங்கியது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டு ராகுபகவான் நாககன்னி, நாகவள்ளி என இருதேவியருடன் மங்கள ராகுவாக உள்ளார். இங்கு ராகுகாலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி ராகு- கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. காலை 10.53 மணிக்கு ராகு பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனையொட்டி நாகநாதசுவாமி கோவிலில் ராகுபெயர்ச்சி விழா லட்சார்ச்சனை தொடங்கியுள்ளது. முன்னதாக ராகுபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடபெற்று புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. பின் ராகுபெயர்ச்சி பரிகார லட்சார்ச்சனை தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மேலும் இவ்வாண்டு ராகுபெயர்ச்சி விழா கார்த்திகை மாதத்தில் நடைபெறுவதால் இவ்விரு விழாவையும் சிறப்பாக நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
கடைஞாயிறு கொடியேற்றம்
கடைஞாயிறு கொடியேற்ற விழா நாளை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர) 2-ந் தேதி ராகுபெயர்ச்சி விழா நடக்கிறது. இதனையடுத்து 8-ந் தேதி தேரோட்டமும் 9-ந் தேதி கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடக்கிறது.
கீழப்பெரும்பள்ளம் கேது பகவான்
நாகை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள கேது பகவான் கோவிலில் கேது பெயர்ச்சி விழாவை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது கேது பகவான் காலை 10.53 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். கேது பெயர்ச்சியன்று காலை கோவிலில் விக்னேஸ்வர பூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து கேது பரிகார பூஜையுடன் தீபாராதனையுடன் மகாஅபிசேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10.53 மணிக்கு கேது பெயர்ச்சி தீபாராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.