மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் 'கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள்’ பற்றிய சொல்லரங்கம்
மஸ்கட்: மஸ்கட் தமிழ் சங்கத்தின் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் பற்றிய சொல்லரங்கம் கடந்த மாதம் 20ம் தேதி மஸ்கட் கோல்டன் ஒயாசிஸ் ஹோட்டல் அரங்கில் நடந்தது.ஓமான் நாட்டில் உள்ள இந்திய சமூக சங்கத்தின் கீழ் அமைந்துள்ள அனைத்து மொழி சார்ந்த சங்கங்களிலும் மிகவும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட மஸ்கட் தமிழ்ச் சங்கம் 2,500க்கும் மேற்பட்ட குடும்ப தனி நபர் எண்ணிக்கையையும் கொண்டது.
மஸ்கட் தமிழ்ச் சங்கம் ‘இலக்கியப் பட்டறை’ நிகழ்ச்சியில் கடந்த மாதம் 20ம் தேதி 'கவிஞர் கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களில் விஞ்சி நிற்பது தத்துவமா! காதலா! என்ற தலைப்பில் ‘சொல்லரங்கம்’ நிகழ்ச்சி மஸ்கட் கோல்டன் ஒயாசிஸ் ஹோட்டல் அரங்கில் நடந்தது. சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சென்னை, கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர், பொதுச் செயலாளார், துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் ஆலோசகர் மற்றும் ‘தமிழ்த் தேர்’ நூலின் ஆசிரியர் கவிஞர். திரு. காவிரிமைந்தன் அவர்கள் இந்நிகழ்ச்சியின் நடுவராகச் செயல்பட்டார்.
தமிழ்ச் சங்க உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பேச்சாளர்களைக் கொண்டு இந்த மிகச் சிறப்பான, விறுவிறுப்பான சொல்லரங்கம் நடைபெற்றது. ஒன்பது பேர்களைக் கொண்ட ஒரு அணியினர் கவிஞர் கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களில் விஞ்சி நிற்பது தத்துவம் என்றும் மறு அணியினர் காதலுக்கு வலு சேர்த்தும் வாதிட்டு அரங்கத்தினை அதிரச் செய்தனர்.
அரங்கம் நிறைய சங்க உறுப்பினர்கள் குடும்பதினர்களுடன் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்த இவ்விழாவில் நடுவர் கவிஞர். திரு. காவிரிமைந்தன் அவர்கள் எழுதிய ‘கவியரசு கண்ணதாசன் பாடல்கள்-காலத்தின் பதிவுகள்’ என்ற நூலும், காவியக் கவிஞர் வாலி பற்றிய ‘வாழும் தமிழே வாலி’ என்ற நூலும் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் திரு. எஸ்.கே. ராவ் மற்றும் திருமதி. சித்ரா நாராயணன் அவர்களால் வெளியிடப்பட்டது.
முன்னதாக தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. ஜானகிராமன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். சங்கப் பொருளாளார் திருமதி. விஜயலக்ஷ்மி வரவேற்புரை ஆற்றினார். துணைத் தலைவர் திரு. அகமத் ஜமீல் அவர்கள் பேச்சாளர்களை அறிமுகம் செய்தார். இறுதியாக உறுப்பினர் நலச்செயலாளர் திரு.ஜெயசெல்வன் நன்றியுரை வழங்கினார்.