அண்ணாமலைக்கவிராயர் 121வது ஆண்டு நினைவு தினவிழா
சங்கரன்கோவில்: சிந்துக்கவிப்பேரரசு அண்ணாமலைக்கவிராயர் 121வது ஆண்டு நினைவு தினவிழா சென்னிகுளத்தில் நடைபெற்றது.
காவடிச்சிந்து, ஊற்றுமலை தனிப்பாடல் திரட்டு, கோமதி அந்தாதி, நவநீதகிருஷ்ணசாமி பிள்ளைத்தமிழ், வீரை சிலேடை வெண்பா, சீட்டுக்கவிகள் முதலிய நூல்களையும், இலக்கண, இலக்கியங்களை தெய்வ மணம் கமழும்படி பாடியவர் சிந்துக்கவிப்பேரரசு அண்ணாமலைக்கவிராயர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவிந்தராஜன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை, கவிஞர் ராமசாமி குழுவினரின் காவடிச்சிந்து பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணாமலையாருக்கு கலசபூஜை, மகா அபிஷேகம், கும்ப அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.
செம்மொழி புலவர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கழுகுமலை சாமசுந்தரம் "காவடிச்சிந்தில் கவிராயர்' என்ற தலைப்பில் உரையாற்றினார். .
நிகழ்ச்சியில் சென் னை குன்னக்குடி இசைப்பள்ளி இயக்குநர் குன்னக்குடி பாலா, சென்னை அம்பத்தூர் திருவருள் திருச்சபை அருளாளர் பீடம் நிறுவனர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.