இன்றைய அம்மாக்களுக்கு வீட்டு வேலைகளில் திறமையில்லையாம்..!
அதாவது பிஸ்கட், கேக் போன்றவை தயாரிப்பது, துணி கிழிந்தால் தைத்துக் கொள்வது, பட்டன் பிய்ந்து போனால் தைப்பது, தையல் மெஷினைப் பயன்படுத்துவது போன்றவற்றில் இங்கிலாந்துப் பெண்கள் பலருக்கும் விருப்பம் இல்லையாம்.
அதேபோல வீட்டிலேய ஜாம் தயாரிப்பதற்கும் பல இளம் தாய்மார்களுக்கு கடுப்பாக உள்ளதாம். 35 வயது கொண்ட 1000 தாய்மார்களையும், 45 வயதுக்கு மேலான 1000தாய்மார்களையும் சந்தித்து இதற்காக பேட்டி கண்டுள்ளனர்.
அதில், பத்து இளம் தாய்மார்களில் 9 பேருக்கு எப்படி சட்டை தைப்பது என்று தெரியவில்லையாம். அதேபோல அவர்களில் பாதிப் பேருக்கு தங்களது கணவன், பிள்ளைகளின் பெயர்களை சட்டையில் தைக்கத் தெரியவில்லையாம்.
அதேசமயம், 45 வயதைக் கடந்த தாய்மார்களில் 43 சதவீத பெண்மணிகளுக்கு ஜாம் தயாரிக்க நன்றாகத் தெரிந்திருக்கிறதாம்.
இந்த ஆய்வு வெளிநாட்டில் எடுக்கப்பட்டது. எனவே வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள சின்னச் சின்ன வீட்டு வேலைகள் குறித்த ஆய்வாக இது உள்ளது. எனவே நமது நாட்டு இளம் தாய்மார்களுக்கு இது பொருந்துமா என்பது தெரியவில்லை.
இருந்தாலும் நம்ம ஊர் பெண்மணிகளை இந்த வெளிநாட்டுப் பெண்களுடன் கண்டிப்பாக ஒப்பிடவே முடியாது. ஒப்பிட முடியாத அளவுக்கு பல வேலைகளிலும் உண்மையிலேயே திறமையானவர்கள்தான் நம் பெண்கள். வீட்டு வேலைகள் அத்தனையையும் இழுத்துப் போட்டு்ச் செய்வதில் நம் பெண்களுக்கு நிகர் அவர்கள்தான். கணவரைக் கவனிப்பது, மாமனார் மாமியாரைப் பார்த்துக் கொள்வது, பிள்ளைகளைப் பரமாரிப்பது, அலுவலகத்தில் வேலையில் கலக்குவது என 'தசாவதாரம்' 'எடுப்பதில் நம் பெண்கள் எப்போதும் ஜொலிக்கத் தவறியதில்லை...
அது மட்டுமா.... ஊறுகாய் போடுவது, வற்றல் போடுவது, வடாம் போடுவது, இட்லி மீந்தால் சட்டுப்புட்டென்று பிரித்துப் போட்டு உப்புமா கிண்டுவது, சட்டையில் கிழிசல் ஏற்பட்டால் கை ஊசியால் டஇழையாடுவதுட, மோர் மிளகாய் செய்வது என பற் பல வீட்டு வேலைகளிலும் சகலகலாவல்லிகளாகவே உள்ளனர். எனவே இந்த ஆய்வுக்கும், நம் ஊர் பெண்மணிகளுக்கும் நிச்சயம் சம்பந்தம் இல்லை என்று ஆறுதல் கொள்ளலாம்!.