டி. செல்வராஜின் ‘தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
முற்போக்கு எழுத்தாளர் டி.செல்வராஜ் எழுதிய ‘தோல்' நாவல் இந்த ஆண்டிற்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் மதிப்பிப்பிற்குரிய விருது சாகித்ய அகாடமி விருது. இந்த விருது கடந்த 1955ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் முதலாக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாவலுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 2009ம் ஆண்டு முதல் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 10000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்வது சாகித்ய அகாடமி அமைப்பு.
இந்த அமைப்பு இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது.
எழுத்தாளர்களின் எழுத்தாக்கத்தை கவுரவப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மொத்தம் 24 மொழிகளில் வெளியான சிறந்த இலக்கியங்களைத் தேர்வு செய்து சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 24 விருதுகளில் 12 விருதுகள் கவிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 12 கவிதை புத்தகங்கள் தவிர, 6 சிறுகதை தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு சுய சரிதை மற்றும் ஒரு திறனாய்வு நூலுக்கு இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படும் என்று அகாடமி அறிவித்துள்ளது.
கவிஞர்களில் கே.சச்சிதானந்தம் (மலையாளம்-மாரன்னு வச்ச வழிகள்), லேட் பாலகிருஷ்ணா பாவ்ரா (டோக்ரி-டிம் டிம் கார்தே தாரே), மக்கான் லால் கான்வால் (காஷ்மீரி-யாத் அரங்காஸ் மான்ஸ்) ஆகியோர் அடங்குவர். தமிழில் முற்போக்கு எழுத்தாளர் டி.செல்வராஜ் எழுதிய தோல் என்ற நாவல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புக்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நாவலாசிரியர் தாயிலின் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பிற்கும் (தீஸ் எரர்ஸ் ஆர் கரெக்ட்), பிரபல வங்காள மொழி எழுத்தாளர் முகோபாத்யாயாவின் பிரசன் என்ற நாவலுக்கும் சாக்த்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
ஜனவரி 2008 முதல் டிசம்பர் 2010 வரை வெளியிடப்பட்ட படைப்புகளில் சிறந்த படைப்புகள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருது பெறுவோருக்கு பரிசுத்தொகையாக ரூ.1 லட்சம் ரூபாயுடன் செப்பு பட்டயம் மற்றும் சால்வை ஆகியவையும் வழங்கி கவுரவிக்கப்படும்.