இதழ் பிரித்து மெல்லச் சிரியேன்...!
ஏன் சில பெண்கள் உரையாடலின்போது 'உம்' கொட்டுவது கூட ஆண்களுக்குப் பிடிக்கும். இப்படி ஒவ்வொரு நுனுக்கமான விஷயத்திலும் சில சுவாரஸ்யங்கள் அடங்கியிருக்கும். எத்தனை விஷயங்கள் இருந்தாலும் அந்த சிரிப்புக்கு உள்ள மகத்துவம் எதிலுமே கிடையாது. அதிலும் 'ஹஹ்ஹஹ்ஹா' என்று பலமாக சிரிக்காமல், சின்னதாக இதழ் மட்டும் விரிந்து, அழகான மின்னல் போல வந்து போகுமே அந்த மென்மையான புன்னகை அதற்கு ஈடு இணையே கிடையாது.
நாட்கள் நீண்டபோதும்
நேரங்கள் ஓடிக் கடந்தபோதும்
இரவெல்லாம் விழித்து, துடித்துத், தவித்திருந்தபோதும்
உன் ஒரு சின்னப் புன்னகை வந்தால் போதும்
எல்லாமே மறைந்து போகும்!
இது காதலியின் புன்னகையைப் பார்த்து காதலின் சொல்லும் வார்த்தை. காரணம், அவனுக்கு என்னதான் கஷ்டம் வந்தாலும், அத்தனையையும துடைத்துப் போட்டு விடுகிறதாம் அந்த புன்னகை.
செல்லமே
ஏன் இப்படி இறுகிப் போய் ஒட்டிக் கிடக்கின்றன
உன் இதழ்கள்
இதழ் பிரித்து, இதமாக விரித்து
மெல்லச் சிரியேன்!
சிரிக்கவே செய்யாமல் உம்மென்று இருக்கும் காதலியைப் பார்த்து இப்படிச் சொல்கிறான் காதலன். காதலியின் பேச்சைக் கேட்காமல் போனால் கூட பரவாயில்லை. அவள் முகத்தில் சிரிப்பைப் பார்த்தால்தான் அவனுக்கு நிம்மதியாம். புன்னகைக்கு அவ்வளவு மதிப்பு. நாம் சிரிக்காவிட்டாலும் பரவாயில்லை, நமக்குப் பிரியமானவரின் முகத்தில் சிரிப்பு நிலைத்திருக்க வேண்டும் என்ற அன்பான ஆசையும் கூட.
இரு விரல்களால்
பூமியைத் தூக்கி நிறுத்த முடியும் என்றால்
நிச்சயம் அதைச் செய்வேன்
உன் புன்னகை கண்டால்
அதுவே
உன் இதழ் விரிந்த புன்னகையை மீண்டும் பார்க்க முடிந்தால்
மேலும் ஒரு நூறு முறை அதைச் செய்வேன்...!
இதைத்தான் பாரதிதாசன் இப்படிச் சொன்னார்...கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் நிம்மதியே காதலில் கரைத்து, அன்பில் நனைத்து, ஆதரவும், ஆறுதலும் சேர்த்து கொடுக்கப்படும் வார்த்தைகள்தான். அந்த வார்த்தைகள் நமக்குப் பிடித்தமானவரிடமிருந்து வரும்போது கிடைக்கும் உற்சாகமும், சந்தோஷம் இருக்கிறதே... அதை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.
தேவதையே
உன் ஒரு சின்னப் புன்னகை போதுமடி கண்ணே
ஒரு கோடி ஆண்டுகள் நான் சுவாசித்து வாழ
உள்ளம் மயக்கும் உன் புன்னகையில்
மலைத்து மயங்கி கிறங்கி உறங்கிப் போய் விடுவேன்
இன்னும் கொஞ்ச நேரம் உன் இதழ் பிரித்து நில்.
என்னதான் கோபப்பட்டாலும், என்னதான் வருத்தம் ஏற்பட்டாலும், எப்படிப்பட்ட ஏமாற்றம் கிடைத்தாலும், இந்த அன்புக்கும், பாசத்துக்கும் ஏங்காத நெஞ்சம் இருக்க முடியுமா... காதல் கொண்ட நெஞ்சங்களுக்குத்தான் இது தெரியும்...எனவே நிறைய சிரியுங்கள்.. உள்ளங்கள் சந்தோஷத்தில் திண்டாட!