ரியாத்தில் தவ்ஹீத் ஜமாத் நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்
ரியாத்: சவூதி அரேபியாவின் ரியாத் மாநகரில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் நடத்திய இம்முகாமில் 253 பேர் இரத்ததானம் செய்தனர்.
ரியாத் மாநகரிலுள்ள மிகப்பெரும் மருத்துவமனைகளில் ஒன்றான கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை இரத்த வங்கியில் கடந்த 13ம் தேதி மாபெரும் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமில் கலந்து கொண்ட 253 பேரிடம் இருந்து 110 லிட்டர் ரத்தம் எடுக்கப்பட்டது. ஏற்கனவே பல முறை ரத்ததானம் வழங்கியவர்களே இந்த முகாமிலும் கலந்து கொண்டு உயிர் காக்கும் ரத்தத்தை தானம் செய்தனர்.
தற்போது பெறப்பட்ட ரத்தம் வரும் ரமலான் மாதத்தில் புனித மக்கா நகருக்கு உம்ரா செய்ய வருபவர்களின் தேவைக்காகப் பயன்படுத்தப்படும்.
இது குறித்து சவூதி அரேபிய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தற்போது எங்கள் வசம் 9,000 யூனி்ட் ரத்தம் உள்ளது. இது தவிர சேமித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா, பிளேட்லெட்ஸ் மற்றும் கோல்ட் பிளாஸ்மா ஆகியவை உள்ளன. சவூதியில் 152 ரத்த வங்கிகள் உள்ளன என்றார்.
முகாம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல தலைவர் பைசல் முகமது கூறுகையில்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் நடத்திய 19வது மாபெரும் ரத்ததான முகாம் இது. இந்த அமைப்பு ரத்ததான முகாம்கள் நடத்துவதோடு மட்டுமல்லாமல் அவசர காலங்களில் தேவைப்படுவோருக்கும் ரத்தம் வழங்கி வருகிறது என்றார்.