நீதான் ஸ்பெஷல்...!
அந்த ஜிவ்வுக்கு என்ன அர்த்தம் என்று கூற முடியாது.. லவ்வு வந்துருச்சுன்னா, அடுத்து இந்த ஜிவ்வு வரும், அவ்வளவுதான்.
வான் முழுவதும் நட்சத்திரம்
ஆனால் நிலவுதான் ஸ்பெஷல்
மரம் முழுவதும் இலை
ஆனால் பூக்கள்தான் ஸ்பெஷல்
என்னைச் சுற்றிலும் நிறையப் பேர்
ஆனால் நீ மட்டுமே எனக்கு ஸ்பெஷல்...
இது காதலில் விழுந்தவர்கள் பாடும் முதல் கவிதையாகக் கூட இருக்கும். காரணம், எல்லாமே அவர்களுக்கு மறந்து போய் விடும். 'போகஸ்' முழுவதும் காதலி மீதுதான். இவள் எனக்கானவள், என் தென்றல்.. என்று மனது கிடந்து அடித்துக் கொள்ளும். அப்போது பீறிட்டெழும் உணர்வுகளை பீப்பாய் பீப்பாயாக அள்ளிச் செல்லலாம்.
கண்கள் பார்த்தபோது
கனவு பிறந்தது
கனவு பிறந்தபோது
கவிதை மலர்ந்தது
கவிதை மலர்ந்தபோது
காதல் பிறந்தது
காதல் பிறந்தபோது
காலம் மறந்தது
காலம் மறந்தபோது
மனசு திறந்தது
மனசு திறந்தபோது
இதயம் புரிந்தது
இதயம் புரிந்தபோது
இனி நீ நான் இல்லை
நாம் மட்டுமே என்று தெரிந்தது
காதலில் விழுந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பெரிய ஆய்வே நடத்தி அதை வெளியிட்டுள்ளனர். உலகக் காதலர்களில் முக்கால்வாசிப் பேர் குழந்தைகள் போல மாறி விடுகிறார்களாம் - மனதளவில். என்ன செய்கிறோம், எப்படிச் செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்று புரிந்து கொள்வது கூட கிடையாதாம் இவர்கள்.
எவ்வளவு பெரிய முரட்டுக்காரனாக இருந்தாலும் கூட இந்தக் காதல் அவனை அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறதாம். ஒவ்வொன்றையும் ரசிக்கப் பழக்குகிறது இந்தக் காதல். கண்களில் தொடங்கி, கால் விரல் நகம் வரை மனிதனை அழகாக்குகிறது இந்தக் காதல். கவிதை பாடுவதும், காதலியின் முகத்தை மனதில் தேக்கி நிறுத்துவதும், வாழ்க்கைப் பாதையை ரசிக்க ஆரம்பிப்பதும் இந்தக் காதலின் மகத்தான பின்விளைவுகளாக இருக்கிறது.
ஷேக்ஸ்பியர் முதல் ஷெல்லி வரை, பாரதி முதல் பாரதிதாசன் வரை, கண்ணதாசன் முதல் கபிலன் வரை காதலைப் பாடாதவர்களே கிடையாது, போற்றாதவர்களும் கிடையாது.
தூற்றுவோர் தூற்றட்டும்
போற்றுவோர் போற்றட்டும்
நாம் இருவரும் இணைந்து இருப்போம் - இதயத்தில்
இதுதான் இப்போதைய காதலர்கள் பாடும் புதுக் கவிதையாக உள்ளது.
உன் சின்னச் சிரிப்பும்
சிணுங்கல் கெக்கலிப்பும்
என் உள்ளத்தைப் பிசையுதடி சகியே
நெஞ்சம் திறந்து பார்
அங்கே நீ இருப்பாய்
நினைவுகளின் வேர் வரை நீ போய் விட்டாய்
உன் நிழல் பார்த்துக் கிடக்கிறேன்
எனவே கனா காணுங்கள், காதலியுங்கள், வாழ்க்கையை அழகாக்குங்கள்!