For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பாவை

Google Oneindia Tamil News

Lord Krishna
28. கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறு பேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

பொருள்: இடையர்குல மக்களாகிய நாங்கள் எல்லாம் கறவைப் பசுக்களின் பின்னாலேயே சென்று காட்டுக்குச் சென்று அங்கு உண்போம். கண்ணா, கள்ளம் கபடம் இல்லாத ஆயர்குலத்தில் வந்து பிறந்தாய் நீ. நீயே எங்களுக்குத் தலைவனாக வந்து சேர்நததை எண்ணி நாங்கள் புண்ணியமடைந்தோம். உனக்கும், எங்களுக்குமான உறவு பிரிக்க முடியாதது. உனது பெயரைச் சொல்லி அழைக்கிறோமேஎன்று சீறி எழாதே. நாங்கள் அறியாத சிறு பிள்ளைகள். அதற்காகக் கோபம் கொள்ளாமல், இறைவா உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக.

29. சிற்றஞ்சிறுகாலே வந்துனைச் சேவித்து, உன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றெம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப்றை கொள்வானென்று காண் கோவிந்தா
எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பொருள்: அதிகாலையில் வந்து, உனது பாதங்களைப் பணிந்து நிற்பதன் பயனைக் கேட்பாயாக. பசுக் கூட்டத்தை மேய்த்து உண்ணும் இடையர் குலத்தில் பிறந்த நீ, நாங்கள் உனக்கு செய்யும் திருப்பணிகளை ஏற்றுக் கொள்ளாமல் எங்களைக் கைவிடுவது முறையாகாது. இன்று கொடுக்கப்படும் பறையை மட்டும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி நாங்கள் வரவில்லை.

காலம் உள்ளவரை, ஏழேழு பிறவிகளுக்கும் உன்னோடு நாங்கள் இப்போது இருப்பதைப் போன்ற அதே அன்போடும், உறவோடும் இருக்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும். அதை மட்டுமே எங்களுக்கு அளித்து அருள் புரிவாயாக.

--

30. வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்குஅப் பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்: திருப்பாற்கடலை கடைந்த மாதவனாம், கேசவனாம் எம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணனை, அழகான பெண்கள் எல்லாம் சென்று மனமுருக வேண்டி அவனது அருளைப் பெற்றனர். அதேபோல வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வாரின் செல்ல மகளான ஆண்டாள் நாச்சியார் நல்கிய இந்த முப்பது பாவைப் பாடல்களையும் பாடி வருபவர்கள், சிவந்த கண்களையும், அழகு பொருந்திய முகத்தையும், நீண்ட தோளினையும் உடைய திருமாலின் அருள் பெற்று, இந்தப் பிறவி மட்டுமல்லாமல் அடுத்த பிறவியையும் பெற்று இன்புற்று வாழ்வார்கள்

--

திருப்பள்ளியெழுச்சி

8. முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலார் யாவர்மற்றறிவர்
பந்தணை விரலியும் நீயும் உன் அடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டி
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதும் காட்டிவந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே

பொருள்: முதல் பொருள், இடைப் பொருள் மற்றும் நடுப் பொருளான இறைவா. உன்னை அந்த மும்மூர்த்திகளைத்தவிர வேறு யார் முழுமையாக அறிய முடியும். நீயும், உன் உமையும் அடியார் வீடு தோறும் எழுந்திருளி காட்சி தந்தீர்கள். செந்தழல் போன்ற உனது திருமேனியை அடியார்களுக்குக் காட்டி அருட் செய்தாய்.திருப்பெருந்துறை கோவிலையும் காட்டினாய். அந்தணன் வேடத்தில் வந்து என்னையும் ஆட்கொண்டாய். அமுதம் போன்ற என் சிவபெருமானே, படுக்கையிலிருந்து துயில் நீங்கி எழுந்து வந்து எனக்கருள்வாய்.

--

9. வின்னக தேவரும் நன்னவு மாட்டா
விழுப் பொருளே உன தொழுப்பாடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழ செய்தானே
வன் திருப்பெருந்துரையை வழி அடியோம்
கண்ணகத்தே நின்று களி தரு தேனே
கடலமுதே, கரும்பே விரும்படியார்
என்னகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய்
எம் பெருமா பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: கடவுள்களால் கூட அறிய முடியாத, அடைய முடியாத கடவுளே, நாங்கள் உங்கள் பாதங்களில் வீழ்ந்து கிடக்கும் அடிமைகள்.

எங்களுக்காக இந்த மண்ணில் இறங்கி வந்து எங்களுக்கு அருள் புரிந்து வாழ வழி செய்தவனே.

வளமிக்க திருப்பெருந்துறையில் வாழும் கடவுளே, எங்களை மகிழ்விக்கும் களி தரும் தேன் நீ. பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதம் நீ, தித்திக்கும் கட்டிக் கரும்பு நீ.

பக்தர்களின் சிந்தனையெல்லாம் நீயே, உலகுக்கு உயிர் ஆக திகழும் எம்பெருமானே, பள்ளி எழுந்தருளாய்.

--

10. புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்
போக்குகின்றோம் அவ மேயிந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்ற நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்த மெய்க் கருணை நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தருளாயே

பொருள்: நாம் போய் பூமியில் பிறக்கவில்லையே என்று திருமாலும், பிரம்மனும் ஆசைப்பட்டனர், ஏக்கப்பட்டனர். காரணம், பூமியில் பிறந்த அனைவருமே திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானால் ஆட்கொள்ளப்படுவதால்தான். அப்படிப்பட்ட அமுதனே, உனது பரந்து விரிந்த இந்தப் பெருந்தன்மையால், எங்களையும் ஆட்கொள்வாயாக. கருணைக் கடலே, உனது நித்திரையிலிருந்து எழுந்து வந்து எம்மை ஆட்கொள்வாயாக.

English summary
Margazhi has arrived and the recital of Thirupavai and Thiruvempavai has also begun in Tamil Nadu temples.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X