இன்று '420' நாள்... அதாங்க, ஏப்ரல் 20 !!
சென்னை: திருடர்கள் பலவிதம்... ஒவ்வொருவரும் ஒருவிதம். பொதுவாக திருடர்களை 420 என்று மக்கள் அழைப்பதுண்டு. இன்று ஏப்ரல் 20, அதை எண்ணில் எழுதினால், 04.20.2013. சரி, எதையாவது வித்தியாசமா எழுதலாமே, என்று தோன்ற இதோ ஒரு சுவாரஸ்யமான 420 ரவுண்ட் அப்...
சில ஆயிரம் டாலர்களை திருடிய சிறு திருடர்களை பிடித்து தண்டிக்கும் நீதி அமைப்பு, பெருமளவு கொள்ளை அடித்த பெரிய காண்டிராக்டர்களை தொடக் கூட முடிவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
சோ... இதோ பலே கில்லாடிகளின் அறிமுகம்
ஹேக்கர்ஸ்...
இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கைகளில் தான் தவழ்ந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் நமது தகவல்களை திருடுவதோடு மட்டுமல்லாமல், முழுமையாக அழித்து முடக்கும் முயற்சிகளில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதற்காக இந்த வலைத் தள திருடர்கள் பயன்படுத்தும் வழிகளாக மின்னஞ்சல், போலியாக உருவாக்கப்பட்ட பதிவிகள், உரலிகள் மற்றும் இரகசிய குறியீடு திருடும் மென் பொருள்கள் போன்றவைகள் இருக்கிறது. இவற்றில் மிகப் பிரதானமாக அவர்கள் ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மின்னஞ்சல்களை
அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள்.
டாஸ்மாக் திருடர்கள்....
பழனி உடுமலை சாலையில் சண்முகா நதி அருகே டாஸ்மாக் கடையில் புகுந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த இரண்டு ஃபுல் பாட்டில் மதுவை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றனராம். அவற்றின் மதிப்பு ரூ.640. அதே சமயம் கல்லாவில் இருந்த பணம் ரூ.60 ஆயிரம் அப்படியே இருந்தது. சரக்கின் மீது கண் வைத்த திருடர்கள் பணத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
அண்ணாச்சி கடை திருடர்கள் ....
பழனி இந்திரா நகரில் பாலு என்பவரின் மளிகைக் கடையில் புகுந்த மர்ம நபர்கள், கடையின் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, அதில் இருந்த 2 பாதாம் பால் பாட்டிலை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரத்தை அவர்கள் கண்ணைத் திறந்து கூட பார்க்கவில்லை என்று தெரிகிறது.
நோபல் பரிசு திருடன்...
பிரிட்டனில் நியூ கேஸ்டில் நகரில் அமைந்துள்ள மேயர் இல்லத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நள்ளிரவில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் 1.5 லட்சம் பவுண்ட்கள் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர். திருடப்பட்ட பொருட்களில் உலகின் மிக உயரிய பரிசு என கருதப்படும் நோபல் பரிசு ஒன்றாகும். ஆயுதப் போட்டியை உலகநாடுகள் கைவிட வேண்டும் என்று சேவையாற்றிய பிரிட்டன் நாட்டின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஆர்தர் ஹெண்டர்சனுக்கு 1934ம் ஆண்டு அமைதிக்கான இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மானிட்டர் திருடர்கள்...
கனடாவில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான 30 கம்ப்யூட்டர் மானிட்டர்களை திருடிய திருடர்கள் மனம் மாறி, அந்த மானிட்டர்களை மீண்டும் பழைய இடத்தில் கொண்டு வந்து வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டனராம்.
சினிமா பார்த்து திருடர்கள்...
பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிலர், விசாரணையின்போது, "தமிழ் சினிமாக்களைப் பார்த்துதான் நாங்கள் திருட்டுத் தொழிலில் ஆர்வம் கொண்டோம். அதை அப்படியே மெயின்டெய்ன் செய்கிறோம்" என கூலாகக் கூறியுள்ளனர்.
பண்டிகை திருடர்கள்...
தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், வழிப்பறி சம்பவங்களில் உள்ள திருடர்கள் பண்டிகை திருடர்கள் வகையறா.
மணல் திருடர்கள்...
குடிநீர் குழாய்களை உடைக்கும் மணல் திருடர்கள், ஆற்றின் ஆழத்தை அதிகரித்து ஆபத்தை உண்டாக்குகின்றனர்.
பைரசி திருடர்கள்...
பாரின் கதையைச் சுட்டு நம்மூர் மசாலா தடவி விற்கும், இவர்களின் படங்களையும் சுட்டு காசாக்குவார்கள் திருட்டு டிவிடி திருடர்கள்
செயின் திருடர்கள்...
இவர்கள் ரொம்பவே பிரபலம். செயினால் குரலை பறிகொடுத்த அப்பாவிகள் கூட இருக்கிறார்கள்.
ஆன் ஸ்கிரீன் 420...
ரிச் இந்தியா டாக்கீஸ் சார்பில், பிரபல தொழிலதிபரான ரிச் இந்தியா சந்திரசேகர் தயாரித்து நடித்து, புதுமுகம் பிரேம்நாத்தின் இயக்கத்தில், கவிஞர் சினேகன் கதாநாயகனாக அறிமுகமான படம் "உயர்திரு 420".
திருடர்கள் நடத்தும் நிகழ்ச்சி ...
‘அழகன் அழகி' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஊர் ஊராகச் சென்று நடிப்பு திறமையாளர்களை கண்டுபிடிக்கிறார்கள் ஜாக், ஆர்த்தி, சாம்ஸ் கோஷ்டி. ஜாக், ஆர்த்தி, சாம்ஸ் மூன்று பேரும் பிரபல திருடர்கள் என்று தெரிய வரும் திருப்பம் ஷாக். ஏமாற்றுவதற்காக இவர்கள் கிராம மக்களை நடிக்க வைத்தாலும் பிற்காலத்தில் அவர்கள் டி.வியில் நடிப்பதை பார்த்து ஜாக் உருகுவது சென்டிமென்ட் டச். இது தான் 'அழகன் அழகி' கதை
இன்னும் பீரோ புல்லிங், பைக் திருடன் என்று வரிசை கட்டலாம் தான். நம்மூரில் திருடர்களுக்கா பஞ்சம்....