ஆடிப்பூரம் அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்
விருதுநகர்: ஆடிப்பூரத்தை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆடிப்பூரம் ஆண்டாள் அவதரித்த நாளாகும். ஆடிப்பூர நாளில் அம்மன், அம்பாள், பெருமாள் கோயில்களில் சிறப்பு உற்சவங்கள், வழிபாடுகள் நடைபெறும்.
அன்றைய தினம் எல்லா கோயில்களிலும் அம்மன், அம்பாள், தாயாருக்கு வளையல் சாற்றுவார்கள். பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றி விட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். இதை அணிந்து கொண்டால் திருமண பாக்யம், குழந்தை பாக்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நந்தவனத்தில் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் பூ பறித்து கொண்டிருந்தார். அப்போது புதர் மண்டியிருந்த இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, துளசி செடியின் அடியில் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழகிய பெண் குழந்தை கிடப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.
அந்த குழந்தையை எடுத்து அதற்கு ‘கோதை‘ என்று பெயர் சூட்டி அன்போடும், பாசத்தோடும் வளர்த்து வந்தார். கோதைக்கு பரந்தாமன் மீது பக்தி அதிகரித்தது. சகல சாஸ்திர ஞானங்கள் இயற்கையாகவே வர ஆரம்பித்தது. பல பாசுரங்களையும், திருமொழி நூல்களையும் பாற்கடல் வாசன் மீது பாடினார். அந்த கண்ணனின் மீது கொண்ட தீவிர பக்தி, காதலாக மலர்ந்தது. கனவில் மட்டுமின்றி நிஜத்திலும் கண்ணனை மணாளனாக நினைக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் திருவரங்கனையே மணப்பது என்ற உறுதியும் பூண்டாள். நினைத்தவாறே ரங்கநாதனை மணந்தாள் ஆண்டாள்.
ஆடிப்பூர தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர விழா ஆகஸ்ட் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐந்தாம் திருநாளான 5ஆம் தேதி இரவு ஐந்து கெருட சேவை நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் பெரிய அன்ன வாகனம், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீசுந்தரராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன் ஆகிய எம்பெருமாள்கள் பெரிய திருவடி (கெருட) வாகனங்களிலும், ஸ்ரீபெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர்.
7ஆம் திருநாளான 7ஆம் தேதி இரவு கிருஷ்ணன் கோவிலில் சயன சேவை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9ஆம் திருநாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.
கஞ்சி கலயம்
காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று, அம்மனுக்கு கஞ்சிவார்த்தல், பால் அபிஷேக விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடிப்பூரம் விழா, புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. வியாழக்கிழமை காலை பங்காரு அடிகளார் வீட்டில் இருந்து தாய்கஞ்சி எடுத்துவரப்பட்டது. அதற்கு சித்தர்பீடத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தாய் கஞ்சியுடன், பக்தர்கள் கொண்டுவந்த கஞ்சியையும் கலந்து சித்தர்பீடத்துக்கு எதிரே உள்ள மைதானத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பால் அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. பால்அபிஷேக நிகழ்ச்சியை பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்தனர். வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்க தண்ணீர், உணவு, பழரசம், டீ, காபி, ஐஸ்கிரீம், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பால்அபிஷேக நிகழ்ச்சி இரவு முழுவதும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் பால்அபிஷேக நிகழ்ச்சி நடைபெறும் என்று சித்தர்பீட அதிகாரிகள் தெரிவித்தனர்.