For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆடித்தபசு... கோமதியம்மனுக்கு காட்சியளித்த சங்கரநாராயணர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சங்கரன் கோவில்: சங்கரன் கோவில் சங்கரநாராயணர் ஆலயத்தில் நடைபெற்ற ஆடித்தபசு காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு விழா 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 20ம் தேதி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரிழுத்தனர். முக்கிய நிகழ்ச்சியான அரியும், சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் தபசுக்காட்சி நேற்று மாலை நடைபெற்றது.

Aadi Thabasu Amman Darsan in TN Temple

கோமதி அம்பாள் தவக்கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலாவாக தெற்குரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு வந்தடைந்தார். மாலை 4 மணி அளவில் சுவாமி சங்கரநாராயணராக வெள்ளி ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத தபசு மண்டபத்தை அடைந்தார். இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி அளித்தார். இந்த நிகழ்வை கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து இரவு 11 மணி அளவில் கோயிலில் இருந்து சுவாமி சங்கரலிங்கராக வெள்ளி யானை வாகனகத்தில் எழுந்தருளி இரவு 12 மணிக்கு தெற்கு ரத வீதியில் அம்பாளுக்கு காட்சியளித்தார். பின்னர் கோமதியம்மனை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.

மானாமதுரையில் தபசு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற ஆடித்தபசு விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு சோமநாதர் சுவாமி விருஷாபரூடராக எழுந்தருளி ஆனந்தவல்லி அம்மனுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் முக்கிய வைபவமாக நடைபெற்ற தபசு உற்சவத்தை முன்னிட்டு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த கால்பிரிவு கிராமத்தார் மண்டகப்படி முன்பு தபசுக் கோலத்தில் எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மனுக்கு சோமநாதர் சுவாமி பிரியாவிடை சமேதராய் விருஷாபரூடராக காட்சியளித்தார். பின்னர் சுவாமியை அம்மன் மூன்றுமுறை வலம் வந்தார். இதன்பின் அம்மனும் சுவாமியும் மாலைகள் மாற்றிக்கொள்ளுதல் நடைபெற்றது. அப்போது திருமணமாகாத இளம்பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்க வேண்டி சுவாமியின் கையில் வைத்து எடுக்கப்பட்ட மாலைகளை திருமணமாகாத இளம் பெண்கள் வாங்கிச் சென்றனர்.

தென்காசியில் தபசு

தென்காசியில் உள்ள மேலச்சங்கரன் கோயிலில் ஆடித்தபசை முன்னிட்டு தபசு காட்சி நடந்தது. இந்த ஆண்டு கடந்த 12ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 11ம் திருநாளான நேற்று மாலை 5.40 மணியளவில் தென்காசி தெற்கு மாசி வீதியில் தபசுக்காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு எரிந்தும் "ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர' என கோஷம் எழுப்பியும் சுவாமி, அம்பாள் தரிசனம் பெற்றனர். இதை தொடர்ந்து இரவும் 10 மணியளவிலும் இரவுக்காட்சியும் நடந்தது. இதை தொடர்ந்து இன்று(23ம் தேதி) இரவு 7.40 மணியளவில் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

English summary
Aadi Thabasu festival was celebrated at Sankarankovil Sankara Narayana Swamy temple on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X