ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் ஆடித்தபசு: திரளும் பக்தர்கள்
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில். இங்கு ஆடித்தபசு திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 20ம் தேதி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரிழுத்தனர். முக்கிய நிகழ்ச்சியான அரியும், சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் தபசுக்காட்சி இன்று மாலை நடைபெறுகிறது.
ஒற்றைக்காலில் தவம்
சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாள். இந்த விழா 12 நாட்கள் நடைபெறும். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் அம்பாளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக அளிப்பர்.
லட்சக்கணக்கில் பக்தர்கள்
பிரசித்தி பெற்ற தபசு விழா இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று காலை கோயில் பிரகார மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடைபெற்றது. பின்னர் அம்பாள் தவக்கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலாவாக தெற்குரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 4 மணி அளவில் சுவாமி சங்கரநாராயணராக வெள்ளி ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத தபசு மண்டபத்தை அடைகிறார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் தபசு காட்சி நடக்கிறது.
இரவு 11 மணி அளவில் கோயிலில் இருந்து சுவாமி சங்கரலிங்கராக வெள்ளி யானை வாகனகத்தில் எழுந்தருளி இரவு 12 மணிக்கு தெற்கு ரத வீதியில் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் இரண்டாம் தபசு காட்சி நடக்கிறது. இந்த தபசு காட்சியை காண மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
விழாவை ஓட்டி கோயில் மற்றும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு இன்று உளளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.