ஆடி அமாவாசை: சதுரகிரி, காரையார் சொரிமுத்து ஐயனார் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
விருதுநகர்: ஆடி அமாவாசை முன்னோர்களை நினைத்து வழிபடும் நாளாகும். அவர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தட்சினாயாண மாதத்தின் தொடக்கத்தில் வரும் அமாவாசையும், உத்திராயண தொடக்கத்தில் வரும் தை அமாவாசையும், மகாளய அமாவாசையும் முன்னோர்களின் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்கரை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி ஏராளமானோர் எள், பச்சரிசி வைத்து முன்னோர்களை வழிபட்டனர்.
சதுரகிரி கோவில்
ஆடி அமாவாசையை ஒட்டி விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் நெல்லை மாவட்டம் பாபாநாசம் அருகில் உள்ள காரையார் சொரிமுத்து ஐயனார் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சிவ தரிசனம்
சதுரகிரி மலையில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா 3 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழா கடந்த 3 ம் தேதி துவங்கியது. அன்று, ஏராளமான பக்தர்கள் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய சிவபெருமானை, தரிசனம் செய்து திரும்பினர்.
காத்திருக்கும் பக்தர்கள்
இரண்டாம் நாளான நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. முக்கிய விசேச தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
சிறப்பு அலங்காரத்தில்
இன்று காலை 6 மணிக்கு, மூலவர்களான சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு, ஒரே நேரத்தில் 18 வகை அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு, 7 மணி முதல், சுவாமிகள் அமாவாசை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
கூட்ட நெரிசல்
மலைப்பாதையில், அத்தியூத்து ஏற்றம், கோணத் தலைவாசல், வழுக்குப் பாறை ஆகிய இடங்கள் குறுகலான பாதையாகும். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த இடங்களை கடந்து செல்ல, ஒரு மணி நேரத்திற்கு மேல், பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பக்தர் மரணம்
நேற்று, மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைத்தோப்பு பாதை வழியாக ,மலையேறிக்கொண்டிருந்த, 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், காத்தாடி மேடு என்ற இடத்தில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என சாப்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு மதுரை, திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், தேனி, உள்ளிட்ட நகரங்களிலிருந்து, மலையடிவாரமான தாணிப்பாறை வரை, சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. அடிவாரத்தில் போதிய இடமில்லாததால், அங்கு இடநெருக்கடி ஏற்படுகிறது.
சொரிமுத்து ஐயனார் கோவில்
காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் சாஸ்தாவாக காட்சியளித்து வருகிறார். ஆடி அமாவாசை திருவிழாவின் போது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து பொங்கலிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.