துபாயில் மனைவியுடன் டூயட் பாடிய திண்டுக்கல் லியோனி
துபாய் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், பொங்கல் தின சிறப்புகளை தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதனை விவரித்தார். பொதுச் செயலாளர் ஜெகநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
துபாய் இந்திய கன்சல் அசோக் பாபு தனது வாழ்த்துரையில், திண்டுக்கல் லியோனியை பட்டிமன்ற படையப்பா என வாழ்த்தினார். மேலும் துபாய் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்து வரும் தமிழர் கலாச்சார நிகழ்ச்சிகள் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுதீன் தனது வாழ்த்துரையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்மொழியாம் தமிழ் மொழியினை கற்றுத் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
துபாய் தமிழ்ச் சங்க பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியின் அணுசரணையாளர் ஆலியா முஹம்மது டிரேடிங்கின் மேலாண்மை இயக்குநர் நாகூர் அல்ஹாஜ் ஷேக் தாவூது தனது உரையில், வாடிக்கையாளர்களை வைத்து நான் பயன்பெற்று வருகிறேன். அந்த வாடிக்கையாளர்களுக்கு தன்னால் இயன்ற வகையில் மகிழ்வினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக திண்டுக்கல் லியோனி தலைமையிலான குழுவினரை வைத்து சிறப்பு நகைச்சுவை பட்டிமன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.எம். ஷேக் தாவூது அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மக்கள் அதிகம் விரும்புவது சமூகப் பாடல்களா? அல்லது காதல் பாடல்களா? எனும் தலைப்பில் திண்டுக்கல் லியோனி தலைமையிலான குழுவினரின் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்ற குழுவில் லியோனியின் மனைவி அமுதா, கோவை தனபால் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். பட்டிமன்றத்தில் தனது மனைவியுடன் லியோனி டூயட் பாடி அசத்தினார். வழக்கமான தனது நகைச்சுவையின் காரணமாக அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து மகிழ்வித்தார்.
பாடல் ஆசிரியை சந்திரா கீதா கிருஷ்ணன், நடன ஆசிரியை கவிதா பிரசன்னா குழுவினரின் ஆடல், பாடல் மற்றும் தமிழர் கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
25க்கும் மேற்பட்ட அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு ஆலியா முஹம்மது டிரேடிங் நிறுவனத்தார் வழங்கிய குக்கர், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
பெட்டினா ஜெம்ஸ் மற்றும் ஏ. முஹம்மது தாஹா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பொருளாளர் கீதா கிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்சிக்கான அணுசரனையினை ஆலியா முஹம்மது டிரேடிங், பிளாக் டுலிப் பிளவர், சிவ் ஸ்டார் பவன், அரேபியன் பார்க் ஹோட்டல், பிரீமியர் கிச்சன் அப்ளையன்ஸ், சக்தி சுத்தமான நெய் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கியிருந்தன.